சென்னை மழை வெள்ள நிவாரணம்! ரூ 6 ஆயிரம் எந்த மூலைக்கு? போதவே போதாது.. சீறும் ஜி.கே.வாசன்
சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ள நிவாரண அறிக்கை போதுமானதல்ல என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வெள்ளம் பாதித்த மக்களின் குடும்பத்திற்கு ரூ 6 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு , வீடுகள், படகுகள், வலைகள் சேதத்திற்கு இழப்பீடு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் போதுமானதாக இல்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டும்.
தமிழக அரசு பல்வேறு நிவாரணங்களை அறிவித்து இருக்கிறது. இந்நிலையில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து கட்டில் மெத்தை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு பழுதடைந்துள்ளது. அவற்றிற்கான இழப்பீடு எதுவும் அறிவிக்க வில்லை. அவற்றை கணக்கீட்டு இழப்பீடு வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட இறவைப் பாசன பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000 அறிவித்துள்ளது போதுமானது இல்லை. ஒரு ஏக்கர் பயிரிடுவதற்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் செலவாகிறது. ஆகவே ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். ஹெக்டேர் அளவில் கணகிட்டு அறிவித்து இருப்பது விவசாயிகளை மறைமுகமாக ஏமாற்றும் விதமாக அமைந்திருக்கிறது.
மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் அவர்கள் குடும்பங்களின் எதிர்கால நலன் கருதி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதோடு அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மீனவர்களின் மீன்பிடி வலைகளுக்கு குறைந்த பட்சம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
வழங்கப்படும் நிவாரணங்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் முழுயைாக சென்றடையும் வகையில் வழங்க வேண்டும். இதில் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினரின் குறிக்கீடு இல்லாமல் முழுமையாக வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்வதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications