திமுக புள்ளிகளுக்கு மட்டுமே குறிவைத்து ஸ்கெட்ச் - சிக்கிய டி சி.டி.மணியின் ரத்த ச(த)ரித்திரம்!
சென்னை: தற்போதைய திமுக ஆட்சியில் முதலில் சிக்கியிருப்பது சி.டி. மணி என்ற சென்னை ரவுடி... சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் திமுக புள்ளிகளை மட்டும் ஸ்கெட்ச் போட்டு 'தூக்குவது' என்ற பார்முலாவில் கொடிகட்டிப் பறந்த சி.டி. மணியின் ரவுடி சரித்திரம் திகிலூட்டுபவைதான்.
சென்னை மாநகரில் ஒரு காலத்தில் வெள்ளை ரவி, மாலைக்கண் செல்வம், சேரா, பங்க் குமார், வெல்டிங் குமார், அயோத்தியா குப்பம் வீரமணி, ஐஸ் ஹவுஸ் திருநா, ராட்டினம் குமார் என ஏகப்பட்ட ரவுடிகள் குலைநடுங்க வைத்தனர். இவர்களில் பலர் போலீசாரின் என்கவுண்ட்டர் தோட்டாக்களால் சல்லடையாக்கப்பட்டனர். சிலர் கோஷ்டி மோதல்களில் போட்டுத் தள்ளப்பட்டனர்.
சி.டி. மணி, மன்னார்குடி பேராசிரியர்...9 ஆண்டுகளாக நீடிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு மர்மங்கள்
இந்த பெரும் தாதாக்கள் காலம் ஓய்ந்த பின்னர் அன்று இந்த குண்டர்களிடம் அடியாட்களாக இருந்தவர்கள்தான் பின்னர் சென்னையில் தலையெடுத்து ரவுடிகளாகினர். திண்டுக்கல் பாண்டி எனும் ரவுடியின் அல்லக்கையாக இருந்த சி.டி. மணி, சென்னையின் ரவுடியானதும் கூட இப்படித்தான்.
ரவுடி சி.டி. மணி கைது- ராமஜெயம் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணை? சிக்கப் போகிறாரா முக்கிய புள்ளி?
அரசியல் ஆதரவுடன் ஆட்டம்
சி.டி.மணியின் ஏரியா அடையாறு, கிண்டி, தியாகராய நகர், தேனாம்பேட்டைதான்! கோட்டையில் கோலோச்சியவர்களின் அசுர அரசியல் பலத்துடன் தென்சென்னை, மத்திய சென்னையில் இந்த சி.டி. மணி ஆடிய ஆட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சரக்கு அடிக்கவே ப்ளைட் பிடித்து மும்பைக்குச் செல்ல சி.டி. மணிக்கு ஏர் டிக்கெட் போட்டுத் தர அரசியல் கும்பல் வரிசை கட்டி நின்ற காலமும் இருந்தது.
சிலோன் மோகன் முதல்..
சி.டி. மணியின் முதல் பயங்கர கொலை ரவுடி மோகனைப் போட்டதுதான். திண்டுக்கல் பாண்டி கோஷ்டியில் சி.டி.மணியுடன் இருந்தவர்தான் சிலோன் மோகன். ஆனால் மோகனை தலையெடுக்க விடாமல் சீவித் தள்ளியது சி.டிமணி கேங். இதன்பின்னர் சென்னை வேளச்சேரியில் திமுக பிரமுகர் ஒருவருக்கு ஸ்கெட்ச் போட்டது இந்த கொலைகார கோஷ்டி. ஆனால் அந்த திமுக பிரமுகர், வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் தப்பி பிழைத்தார்.
ராமஜெயம் கேஸ்
பங்க் குமார் தொடங்கி பல ரவுடிகள் அரசியல் சாகவாசத்தால் அழிந்த பாதையில்தான் சிடி மணி கேங்கும் போனது. சென்னையில் ஆளும் கட்சிக்கு எதிரான அத்தனை பேரையும் அடக்குவதற்கு ஏவிவிடப்பட்டது சிடி மணி கேங். அதேபோல் தமிழகத்தில் திமுக புள்ளிகளை மிரட்டுவதற்கும் தூக்குவதற்கும் ஒரு கோஷ்டி இந்த சிடி மணி கேங்கை பயன்படுத்தி வந்தது. இதனால் இயல்பாகவே போலீஸின் அடைக்கலமும் சிடி மணி கோஷ்டிக்கு கிடைத்தது. இப்படித்தான் ஒரு முக்கிய புள்ளிக்காக திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சிடி மணி கோஷ்டி இறங்கியது என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
அன்றே எச்சரித்த பங்காளிகள்
என்னதான் அரசியல் ஆதரவு இருந்தாலும் ரொம்ப ஆடாதடா மணி.. அடுத்து என்ன நடக்கும்னு தெரியாது.. அடங்கிப் போடா என கூட இருந்த பங்காளிகள் எச்சரித்தனர். ஆனால் அதிகார அரவணைப்பின் போதையில் மிதந்தபடியே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது சிடி மணி கேங். இப்போது எல்லாமும் தலைகீழாக சி.டி. மணி கோஷ்டியும் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சி.டி. மணி சொல்லப் போகும் தகவல்கள் என்ன? அவை அம்பலத்துக்கு வருமா? வராதா? என்பதெல்லாம் வரும் நாட்களில் தெரிந்துவிடும்.