கோவில் கோவிலாக படியேறியும் பதவி "கோவிந்தா"... காயத்ரியை இப்படி கைவிட்டுட்டாரே அண்ணாமலை
காவடி சுமந்தும் காயத்ரிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. கோவில் கோவிலாக படியேறியும் பதவி பறிபோனதுதான் மிச்சம்.
சென்னை: காயத்ரி ரகுராமின் கட்சிப்பதவி பறிபோயுள்ளது. காவடி சுமந்தும் முருகன் காப்பாற்றவில்லை... கோவில் கோவிலாக யாத்திரை சென்றும் கட்சிப்பதவியை கடவுளும் காப்பாற்றவில்லை. பதவியை பறிக்கமாட்டார் என்று நம்பிய காயத்ரியை அண்ணாமலை இப்படி கை விட்டுட்டாரே என்ற குரல்கள் கேட்கத்தொடங்கியுள்ளன.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு பிரிவுகளுள் ஒன்றாக இருக்கும் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக இருப்பவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகளாவார். 2002ல் சார்லி சாப்ளின் படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான காயத்ரி ரகுராம், 2019ம் ஆண்டு வரை பல்வேறு படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி, பின்னர் 2020ல் பாஜகவில் இணைந்தார்.
காவடி சுமந்து வந்து வேண்டுதல் வைக்கும் பக்தர்களின் கவலைகளை போக்கி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் பழனி தண்டாயுதபாணி. காவடி சுமந்து மலையேறி போய் பழனி முருகனிடம் வெயிட்டான வேண்டுதலை வைத்து விட்டு வந்திருக்கிறார் காயத்ரி ரகுராம். கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட அவருக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
தலைவர் நீக்க மாட்டார்.. நம்பிக்கையா பேசுனாங்களே காயத்ரி.. ஆக்சன் எடுத்த அண்ணாமலை.. ஓ இதான் காரணமா!
காயத்ரி அறிவிப்பு
கடந்த பிப்ரவரி 1ம் தேதி கலை கலாச்சார பிரிவில் இருந்து மாநில செயலாளர்கள் சிலரை நீக்குவதாக, அப்பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் தனது லெட்டர் பேடில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தனது அணியில் சில நிர்வாகிகள் செயல்பாடின்றி இருப்பதாகவும், சிலர் அணியின் தலைமைக்கு எதிராக செயல்படுவதால் கட்சிப் பணிகள் பாதிக்கப்படுகிறது எனவும். நீக்கப்பட்டவர்களுக்கு கட்சியில் வேறு பதவிகள் கிடைக்கும் என தான் நம்புவதாக அந்த அறிவிப்பில் காயத்ரி ரகுராம் கூறியிருந்தார்.
கட்சியில் சலசலப்பு
திரைத்துறையில் பிரபலங்களாகவும், முன்னோடிகளாக இருந்து வரும் ஃபெப்சி சிவா, தயாரிப்பாளர்கள் அழகன் தமிழ்மணி, பாபு கனேஷ், உமேஷ் பாபு, விருகை வெங்கடேஷ், சர்மா மற்றும் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
மாநில அளவில் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் தேசிய தலைமையின் ஒப்புதலுடன் தான் நடக்க வேண்டும் என்ற கட்சி விதிக்கு மாறாக காயத்ரி ரகுராம் தன்னிச்சையாக செயல்பட்டு நிர்வாகிகளை நீக்கியது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
கட்சித்தலைமை அறிவிப்பு
இத்துடன் ஜனனி நாராயணன், ஜனனி கிருஷ்ணமூர்த்தி, ரேகா துரைலிங்கம், இயக்குனர் திருமலை என 8 பேரை புதிதாக மாநில நிர்வாகிகளாக நியமிப்பதாகவும் தனது முடிவை கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆதரிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தார். இதனிடையே, இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காயத்ரி ரகுராம், நிர்வாகிகளை நீக்கியது செல்லாது என பாஜகவின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்தார்.
காயத்ரிக்கு கடிவாளம்
இது தொடர்பாக கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "01.02.2022 அன்று கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம், அந்த பிரிவின் நிர்வாகிகள் மாற்றம் குறித்து சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டபடி இல்லாமல், கலை மற்றும் கலாச்சார பிரிவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நிர்வாகிகள், அதே பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி தெரிவிக்கப்படுகிறது. என கூறப்பட்டுள்ளது.
காயத்ரி ட்வீட்
இந்நிலையில், காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், தலைவரின் முடிவை ஏற்பதாக பதிவிட்டார். அவர் பாஜகவை விட்டு விலகப் போகிறார், பாஜக அவரை நீக்கப் போகிறது என்றெல்லாம் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை காயத்ரி. கட்சிப் பதவியைப் பறிக்கப் போவதாகவும் கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. இதையடுத்து மார்ச் 28ம் தேதி அவர் 2 ட்வீட்டுகள் போட்டார்.
பதவி பறிபோகாது
முதல் டிவீட்டில், என்னை பதவியில் இருந்து நீக்குவது பற்றி பாஜக நினைக்கவில்லை எங்கள் தலைவர் என்னை நீக்க மாட்டார். கடினமாக உழைத்தவர்களுக்கு பதவி உயர்வு மட்டுமே பாஜக தருகிறது. பாஜக எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இது பாரத தாய் பூமி எனவே பெண்கள் எப்போதும் வழி நடத்துவார்கள் என்று காயத்ரி ரகுராம் கூறியிருந்தார். 2வது டிவீட்டில், என்னை பதவியில் இருந்து நீக்கி, என்னை முடக்க வேண்டும் என்று திமுகவும், விசிகவும் மட்டுமே விரும்புகின்றன. திமுகவும், வி.சி.க.வும் என்னைப் பற்றிய முழுக்க முழுக்க பொய்யான செய்திகளைப் பரப்புகின்றன என்று திமுகவையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
கோவில் கோவிலாக தரிசனம்
கட்சிப்பதவி பறிக்கப்படும் என்ற பேச்சு அடிபட்ட உடனே யாத்திரை கிளம்பினார் காயத்ரி. முக்திநாத், பசுபதிநாத் கோவில் என பல கோவில்களுக்கு யாத்திரை சென்றார் காயத்ரி. மன அமைதிக்காக அவர் தியானம் இருந்தார். யாத்திரை முடிந்து திரும்பி வந்த அவருக்கு பதவி பறிபோயிருக்கிறது. தனது பதவி எப்படியும் பறிபோகாது என்று நம்பிக்கையோடு காத்திருந்தவருக்கு கடைசியில் பதவி பறிபோய் விட்டது. காயத்ரியை கடவுளும் கை விட்டு விட்டார் தலைவர் அண்ணாமலையும் கை விட்டு விட்டார். பாஜகவில் காயத்ரி நீடிப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.