ரூ.20 டோக்கன் தந்தவர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம்.. மக்கள் ஏமாற மாட்டார்கள்.. கே.டி.ஆர் விமர்சனம்
Recommended Video
சென்னை: ரூ.20 டோக்கன் தந்த அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு பொருத்தமானது என்றும் இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னமாக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ள நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அமமுக சார்பில் தொப்பி அல்லது குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், பொதுச் சின்னத்தை ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில் அமமுகவுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து, அமமுக கட்சி வேட்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
செம போட்டி.. சம பலம்.. குமரியின் கடைக்கண் பார்வையை அள்ள போவது ராதாவா, குமாரா?!
பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்த அக்கட்சியின் வேட்பாளர் வெற்றி வேல், பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒரு நாள் போதும் என்றார்.
பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் தெரிவித்து தேர்தலில் வெற்றிபெறுவோம் என்று அமமுகவின் தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இரட்டை இலை சின்னத்திற்கு முன்னால் எந்த சின்னமும் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அதே போல், ரூ.20 டோக்கன் தந்த அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு பொருத்தமானது என்றும் இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்; அமமுகவினார் போட்டியிடும் தொகுதிகளில் டெபாசிட் இழப்பார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.