தான செட்டில்மெண்ட் பத்திரப்பதிவில் சிக்கல்? இலவசமாக நிலம் தந்தாலும் பதிவு செய்ய மறுப்பா? பெயிரா வேதனை
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுப் பாதைக்காக நிலத்தை தானமாக வழங்க முன்வரும் மக்கள் எதிர்கொள்ளும் பதிவுத்துறை சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் இதற்காக முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு, தமிழக பதிவுத்துறைக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதன் விவரம் என்ன?
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி , தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐஏஎஸ் அவர்களுக்கு பொது பாதை சம்பந்தப்பட்ட தான செட்டில்மெண்ட் (Gift Settlement Deed) ஆவண பதிவில் நிலவிவரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தான செட்டில்மெண்ட்
அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உருவாக்கப்பட்டுள்ள மனை பிரிவுகளின் பின்பகுதியில் பொதுபாதையில்லாமல் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கான வேளாண்மை பயன்பாட்டிற்கு தேவையான உரங்கள், இடுபொருள்களை கொண்டு செல்வதற்கும் மற்றும் உற்பத்தியான பொருள்களை சந்தைப்படுத்திடுவதை எளிமையாக்கும் வகையில் அனைவரும் பயன் பெற்றிட வேண்டும் என்கின்ற பொதுநல நோக்கில் அப்பகுதிவாசிகள் சிலர் ஒன்றிணைந்து நிலத்தை வாங்கியுள்ளனர்.
நிலம் DTCP-யின் அங்கீகாரம்
அந்த நிலத்தை தாங்களாகவே முன்வந்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு தான செட்டில்மெண்ட் (Gift Settlement Deed) ஆக வழங்கிட விரும்பி சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகும் பொழுது, சம்பந்தப்பட்ட நிலம் DTCP-யின் அங்கீகாரம் பெற்றிருக்கும் பட்சத்தில் அரசாணையின் கீழ் ஆவணங்களை சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் தான பத்திரத்தை பதிவு செய்வதில் எவ்வித பிரச்சினையும் எழுவதில்லை.
அதேசமயம் சம்பந்தப்பட்ட நிலம் அங்கீகாரம் இல்லாமல் கிராமப் பகுதிகளில் அமைந்திருக்கும் பட்சத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமிருந்தும் (BDO), நகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையரிடமிருந்தும், பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலரிடமிருந்தும் (EO), அதுபோல் தற்பொழுது புதியதாக இணைக்கப்பட்டுள்ள மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமிருந்து அனுமதி பெற்றிட வேண்டும் அல்லது தடையின்மை சான்று (NO OBJECTION CERTIFICATE) பெற்றிட வேண்டும் என்கின்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு வலியுறுத்துகிறார்கள்.
ஆவணங்கள் - சார் பதிவாளர்கள்
மேலும் பல்வேறு காரணங்களை தெரிவித்தும் சார் பதிவாளர்கள் பொதுப் பாதையாக்கான தான செட்டில்மெண்ட் (Gift Deed) ஆவணத்தை பதிவு செய்ய மறுக்கின்றனர்.
இதனால் மேற்கண்ட வகையில் தங்களது நிலத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு தான செட்டில்மெண்ட் (Gift Settlement Deed) ஆக வழங்க விரும்புவர்கள் ஆவணங்களை பதிவு செய்ய இயலாமல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஆகவே பெருமதிப்பிற்குரிய பதிவுத்துறை தலைவர் மேற்கண்ட வகையில் பொது மக்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு தான செட்டில்மெண்ட் (Gift Settlement Deed) ஆக வழங்க விரும்பும் நிலங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கான பொது பாதையாக கருதி ஆவணத்தை சார் பதிவாளர்கள் பதிவு செய்திடும் வகையில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து இதற்கான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை வெளியிட்டு உதவிட வேண்டும்" என்று டாக்டர்.ஆ.ஹென்றி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications