தமாகா தனிச்சின்னத்தில் போட்டியிடும்.. பியூஷ் கோயலை சந்தித்த பின்.. ஜிகே வாசன் வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று ஜிகே வாசன் அறிவித்துள்ளார். சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமாகா தலைவர் ஜிகே வாசன் மற்றும் புதிய நீதிக் கட்சியின் ஏசி சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின் இரு கட்சிகளும் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை மதியம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கூட்டணியை உறுதி செய்வதில் மும்முரமாக இருக்கிறார். ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் பாமக, அமமுக ஆகிய கட்சிகள் இணைந்துவிட்டன.

அதிலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்று கூறி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுள்ளார். இதையடுத்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன்படி இன்று தமாகா தலைவர் ஜிகே வாசன் மற்றும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம் ஆகியோரை சந்தித்தார்.
இந்த சந்திப்பு காரணமாக இந்த இரு கட்சிகளும் என்டிஏ கூட்டணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. இதன்பின் செய்தியாளர்களை பியூஷ் கோயல், ஜிகே வாசன் மற்றும் ஏசி சண்முகம் ஆகிய மூவரும் கூட்டாக சந்தித்தனர். அப்போது பியூஷ் கோயல் பேசுகையில், ஜிகே வாசனை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இவர் எனக்கு நண்பர் மட்டுமல்ல.. நாங்கள் 20 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறோம்..
ராஜ்ய சபாவில் 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். அதேபோல் ஏசி சண்முகம் மிகவும் நம்பிக்கைக்குரியவர். நாங்கள் நிச்சயம் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்போம். மீனவர்கள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் என்று அனைவருக்குமான ஆட்சியாக இருக்கும். தமிழக மக்கள் எப்போதும் மோடி மீது அன்பை பொழிந்துருக்கிறார்கள்.
ஜிகே வாசன் மற்றும் ஏசி சண்முகம் ஆகியோரும் எங்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். இனி ஊழலால் தமிழ்நாடு மக்கள் கஷ்டப்பட தேவையில்லை. நிச்சயமாக திமுகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஜிகே வாசன் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications