ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி.. சென்னை புழல் சிறையில் நள்ளிரவில் வலிப்பு!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு நேற்று நள்ளிரவில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வலிப்பு ஏற்பட்டதால் உடனடியாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் ஞானசேகரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்புவதாக அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்பது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை புழல் சிறையில் ஞானசேகரன் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அவருக்கு சிறையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் குற்றாவளி ஞானசேகரனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் ஞானசேகரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்புவதாக அதிமுகவும் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஆயுள் தண்டனை விதிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த மாணவியை, கோட்டூர்புரத்தை சேர்ந்த பெண்ணை ஞானசேகரன் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் புலன் விசாரணை மேற்கொள்ள ஐபிஎஸ் அதிகாரிகளான சினேகப்பிரியா, பிருந்தா, ஐமான் ஜமால் ஆகியோர் கொண்ட சிறப்பு புலன் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த வழக்கை சென்னை மகளிர் நீதிமன்றம் விசாரித்த நிலையில், சம்பவம் நடைபெற்ற 6 மாதத்தில் விசாரணை முடிந்து குற்றவாளி ஞானசேகரனுக்கு எதிராக தீர்ப்பளிக்கபட்டது. ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications