கோகுல்ராஜ் கொலை..அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிசிடிவி காட்சிகள்..யுவராஜ் தரப்புக்கு சாதகமா? பாதகமா?
சென்னை: கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் முறையாக ஆய்வு செய்யவில்லை என கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. கோகுல்ராஜ் இருந்ததாக கடைசியாக பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நாளைய தினம் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் தன்னுடன் படித்த நாமக்கலைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நட்பாக பழகினார். இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சந்தித்துள்ளனர்.
அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. கோகுல்ராஜின் பெற்றோர்கள் அவரை தேடி வந்த நிலையில் மறுநாள் கோகுல்ராஜின் உடல் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தலை வேறு, உடல் வேறாக உடலை கண்ட பெற்றோர்கள் பதை பதைத்து போயினர். அது தற்கொலை இல்லை கொலை என்று பெற்றோர்கள் குற்றச்சாட்டினை முன் வைத்தனர்.
7 மணி நேரம் நடந்த மீட்டிங்! நள்ளிரவில் அதிரடி காட்டிய அமைச்சர்! மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் ஓவர்
கோகுராஜை ஆணவக் கொலை செய்ததாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி தீர்ப்பளித்தது.
தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட 10 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். விடுதலையான 5 பேருக்கு தண்டனை வழங்கக் கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா, சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீரன் சின்னமலை, பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது வீடியோ காட்சிகளை ஒளிபரப்பிய நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி, அவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தனர்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, கோகுல்ராஜின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோகுல்ராஜை யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள் அழைத்து சென்று கொலை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக வாதிட்டார். கோகுல் ராஜும், சுவாதியும் பேசிக்கொண்டிருந்த போது தான் சென்று விசாரணை நடத்தியதை தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் யுவராஜ் ஒப்புக்கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், கோகுல்ராஜிடமிருந்து சுவாதியை பிரித்து அழைத்து செல்வதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும், கோகுல்ராஜின் தற்கொலை வீடியோ என சொல்லப்படும் காணொலி குற்றம்சாட்டப்பட்டவர்களின் செல்போனில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். அதேபோல் இந்த வழக்கில் 5 பேரை விடுதலை செய்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது.
கோகுல்ராஜ் இருந்ததாக கடைசியாக பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கோயிலின் அமைப்பை புரிந்து கொள்ளவும், உள்ளே செல்லும் வழி, வெளியே வரும் வழி ஆகியவை குறித்து புரிந்து கொள்வதற்காக நாளைய தினம் நேரடியாக சென்று ஆய்வு செய்யவுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே வெள்ளிக்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது யுவராஜ் உள்ளிட்ட மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பிலான வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அப்போது, திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் எட்டு சிசிடிவி கேமராக்கள் உள்ளதாகவும், அதில் இரண்டு சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை மட்டுமே காவல்துறையினர் ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கோகுல்ராஜ் கொலை தொடர்பான வீடியோ குறித்தும் வீடியோ பதிவான மெமரி கார்டு தொடர்பாகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.