தங்கத்தை போல தங்க நகைக் கடனுக்கும் ஏறும் மவுசு.. கூட்டுறவு வங்கிகளில் ரூ.45000 கோடி தங்க நகைக் கடன்
சென்னை: தங்க நகைகளில் விலை மாற்றம் தென்பட்டு வருகிறது. ஓரளவு நகைகளில் விலை குறைந்தாலும், இன்னும் விலை குறையுமா என்ற எதிர்ப்பார்ப்பும் பொதுமக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், எதிர்வரும் நாட்களில் தங்கச் சந்தை மீண்டும் உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் வார்னிங் தந்து வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில் தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தங்க நகைகளுக்கென சிறப்பு மதிப்பு எப்போதுமே உண்டு.. தற்போதைய உலக பொருளாதாரத்தின் சூழல், தங்கங்களின் தேவை, புவிசார் அரசியல் பதட்டங்கள் போன்றவற்றுக்காக தங்கத்தின் விலையில் மாறுதல்கள் காணப்பட்டு வருகின்றன.

தங்கத்தின் விலையில் ஏற்ற-இறக்கம் இருந்தாலும், தங்கத்துக்கான தேவை இருந்து கொண்டே உள்ளது.. காரணம், அவசியமான சமயங்களில் தங்கத்தை பணமாகவும் மாற்றி பெற்றுக்கொள்ள முடிகிறது.. அவசரத்துக்கு பணத்தேவைகளுக்கு வங்கிகளில் கடன் பெற முடிகிறது.
தங்கத்தின் மதிப்பு
பெரும்பாலும், தங்க நகைக்கடனை வங்கியில் பெறுவதற்கு பெரிய அளவிலான நிபந்தனைகளோ, விதிமுறைகளோ கிடையாது. இன்னும் சொல்லப்போனால் மற்ற கடன்களை விடவும் தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதம் மிக மிக குறைவு.. வங்கிகளுக்கேற்ப வட்டி விகிதம் மாறினாலும், அந்தந்த வங்கிகளில் வட்டி விகிதம் இந்த கடனுக்குத்தான் குறைவாகவே இருக்கும்.
அதனால்தான், தேசிய அளவிலான வங்கிகள் மட்டுமல்லாது, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சொசைட்டிகளிலும் தங்க நகைக்கடன் எளிதாகவும், வேகமாகவும் வழங்கப்படுகின்றன.
கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக் கடன்
நம்முடைய மாநிலத்தில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவற்றில், தங்க நகை அடமானம் பேரில், நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், வங்கிகளில் தங்க நகையை அடமானமாக வைத்து கடன் பெறுவோரும் அதிகரித்து வருகிறார்களாம். நாட்டின் வங்கிகள் வழங்கிய தங்க நகைக்கடன்களின் மதிப்பு, நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியிருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது.
தங்க நகைக்கடன் மதிப்பு
இந்த வருட அரையாண்டு வரை வங்கிகளில் பெற்ற நகைக்கடன்கள் 51 சதவீதம் அதிகரித்து, 1,07,307 கோடி ரூபாயாகின. வங்கிகளில் அரையாண்டில் 1 லட்சம் கோடி நகைக்கடன் வழங்குவது இதுவே முதல் முறை என்றனர்.
இந்நிலையில், தமிழக கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில், 42 லட்சம் பேருக்கு, 45,000 கோடி ரூபாய் அளவுக்கு நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தங்க நகை அடமானம்
தங்க நகை அடமானம் வைக்கும் போது, தங்களுடையது தான் என்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி, கடந்த ஜூன் மாதம் வெளியிட்டிருந்தது..
ஆனால், இந்த விதிகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பொருந்தாது என்று கூட்டுறவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே ஏராளமானோர் இந்த சங்கங்களில் கடன் வாங்கினார்கள்..
சவரன் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கிவருவதால், கிராம் தங்கம் மதிப்பில், 75 சதவீதம் வரை கடனாக வழங்கப்படுகிறது.
12,000 கோடி ரூபாய் கடன்
இதுபோன்ற காரணங்களால் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, 42 லட்சம் பேருக்கு, 45,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் வெறும் 31 லட்சம் பேருக்கு, 33,000 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டதாம். இப்போது கூடுதலாக, 11 லட்சம் பேருக்கு, 12,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், 2024 - 25ம் நிதியாண்டு முழுவதும், மொத்தம், 70.28 லட்சம் பேருக்கு, 62,001 கோடி ரூபாய் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications