தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயை தொட வாய்ப்பு.. சேல்ஸ் அதிகரிக்க மகளிர் உரிமைத்தொகை காரணமா?
சென்னை: ஒரு சவரன் தங்கம் விலை 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் ரூபாயை தொட வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். அதேபோல விலை குறைய வரும் காலங்களில் வாய்ப்பு எதுவும் உள்ளதா என்பது பற்றியும் விளக்கமாக பேசியுள்ளார்.
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு பவுன் ஆபரண தங்கம் என்பது ரூ.54ஆயிரத்தை கடந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. என்னதான் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டாலும் மக்களுக்கு தங்கம் மீதான ஆர்வம் மட்டும் குறையவே இல்லை.

எகிறும் தங்கம் விலை: விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்தாலும் அட்சயதிரிதியை நாளில் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதை காண முடியும். கடந்த ஆண்டை விட 30 சதவிகிதம் கூடுதலாக இந்த ஆண்டு தங்கம் விற்பனையாகியுள்ளதாம். அதாவது அட்சய திரிதியை நாளில் 22 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது.
தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிலையில், தங்கம் விலை அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயைக் கூட தொடும் என்று நகை வியாபாரிகள் சங்க தலைவர் கூறினார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-
இன்னும் உயர வாய்ப்பு: தங்கம் விலை கடந்த 2013 ஆம் அண்டு ஒரு கிராம் வெறும் 1,500 தான் இருந்தது. ஒரு சவரன் 12 ஆயிரம் ரூபாயாகத்தான் இருந்தது. ஆனால், இன்று ஒரு சவரன் 55 ஆயிரம் என்ற அளவுக்கு விலை உயர்ந்து விட்டது. இந்த 10 வருடத்தில் தங்கத்தின் விலை 4 மடங்கு உயர்ந்து விட்டது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்பது பெரிய விஷயமே இல்லை.
இதே 2014ல் அடுத்த 10 வருசத்தில் ஒரு சவரன் 55 ஆயிரம், 60 ஆயிரத்திற்கு விற்கும் என சொல்லியிருந்தால் தப்பாக சொல்வதாக சொல்லியிருப்பார்கள்... 2030க்குள் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் வந்து விடும். இன்னும் உயரக் கூட வாய்ப்பு உள்ளது. பொருளாதார வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. பணத்தின் மதிப்பு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
30 சதவிகிதம் கூடுதலாக விற்பனை: பொருளாதார பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயமாக தங்கம் விலை உயரும். அதே மாதிரி கோவிட் போன்ற நோய் வந்தால் நாம் கருதுவதை விட அபரிமிதமாக தங்கம் விலை உயரும். இப்போ இருக்கிற நிலைமையை வைத்து பார்த்தால் கூட 2030க்குள் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொடும் என்பதில் சந்தேகமும் இல்லை. அட்சய திரிதியை நாளில் வழகக்த்தை விட 30 சதவிகிதம் கூடுதலாக தங்கம் விற்றுள்ளது.
80 சதவிகிதம் மட்டும் முன்பதிவில் விற்பனை நடைபெற்றுள்ளது. தங்கம் தொடர்ந்து விலை ஏறி வருவதே மக்கள் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட காராணமாகும். முதலீடு 5 வருடங்களில் இரட்டிப்பாகும் என்பதால் மக்கள் வாங்குகிறார்கள். தங்கம் விலை குறைவதற்கு மிக மிக வாய்ப்பு குறைவு. இன்னைக்கு இருக்கிற பொருளாதார வீழ்ச்சியை அடிப்படையில் பார்த்தால் தங்கம் விலை தொடர்ந்து உயரும்.
குறைவதற்கு வாய்ப்பு இல்லை: இப்போ இருக்கிற போருடைய பாதிப்பு, பொருளாதார பாதிப்பு சீரடைய பல ஆண்டுகள் ஆகும். அதனால் தங்கம் விலை தொடர்ந்து உயரத்தான் செய்யும். குறைய வாய்ப்பு இல்லை. அட்சய திருதியை அன்று மூன்று முறை தங்கம் விலை உயர்ந்தது. அதற்கு காரணம் அன்று காலை 6 மணிக்கு நகைக்கடைகள் திறக்கப்பட்டது. அதனால் 6 மணி நேரத்தில் ஒரு விலையிலும் 9 மணிக்கு வழக்கமாக விலை மாறும். அந்த விலையில் கொடுத்தோம்.
அதன்பிறகு திடீரென்று விலை அதிகமானது. அதனால் 3 மணிக்கு ஒரு விலையில் கொடுத்தோம். கடந்த ஆண்டை விட அட்சயை திரிதியை அன்று 30 சதவிகிதம் கூடுதலாக தங்கம் விற்றது. தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை கொடுக்கிறது.இந்த பணத்தை சிறு சேமிப்பு திட்டத்தில் பெண்கள் முதலீடு செய்கிறார்கள். இந்த சேமிப்பு தங்கமாக மாறுகிறது என்று கூட சொல்லலாம்.. அது ஒரு வரவேற்தக்க ஒன்று" என்றார்.












Click it and Unblock the Notifications