தாறுமாறாக உயரப் போகும் தங்கம் விலை.. 6 மாதத்தில் விலை எப்படி இருக்கும்.. ஆனந்த் சீனிவாசன் சொன்ன தகவல்
சென்னை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கம் விலையால் நகை பிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த 7 மாதத்திற்குள் ரூ.75 ஆயிரத்தை தொட்டு விட்டது. இப்படி தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் சூழலில் ஆனந்த் சீனிவாசன் சொன்ன தகவல் நகை பிரியர்களை மேலும் கலங்கடித்துள்ளது.
தங்கம் விலை கடந்த இரண்டு மாதங்களாக பெரிய அளவில் விலை உயராமல் இருந்தது. கொஞ்சம் விலை அதிகரித்தாலும் மீண்டும் குறைந்து ரூ.71 ஆயிரம் முதல் 72 ஆயிரம் வரை என்ற அளவில் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென கடந்த 1 ஆம் தேதியில் இருந்து தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை
ஒவ்வொரு நாளும் சவரனுக்கு ரூ.300 என்ற அளவில் சீராக அதிகரித்தப்படியே வந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இப்படியாக கடந்த 20 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.3,000 அதிகரித்து விட்டது. இதனால் நகை பிரியர்கள் கலக்கத்தில் உள்ளது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 760 உயர்ந்துள்ளது. இதன்படி இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,380க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ. 75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி பிறந்தபோது ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரம் என்று இருந்த நிலையில் கடந்த 7 மாதங்களில் மட்டும் சுமார் 20 ஆயிரம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையை நினைத்து கலக்கத்தில் இருக்கும் நகைபிரியர்களுக்கு இடியை இறக்கும் விதமாக ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை பற்றி தெரிவித்துள்ளார். அதாவது ஜனவரி மாதத்திற்குள் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.80,000 முதல் 85,000-ஐ தொட்டுவிடும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சவரன் ரூ.85 ஆயிரத்தை தொடும்
தங்கம் விலை வேகமாக ஏறியிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக பெரிய அளவில் விலை மாறாமல் இருந்து வந்தது. விலை ஏறாமல் ஒரே இடத்தில் இருந்தது. இன்றைக்கு தங்கம் ஒரே அடியாக அதிகரித்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் விலை 75 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. இது ஒரு புது உச்சம். இந்த விலை இன்னும் ஏறுமா என்று கேட்கிறீங்க..
இந்த வருஷத்துக்கு என்று நான் கொடுத்திருந்த டார்கெட்டை விட அதிகமாகவே தங்கம் விலை சென்றுவிட்டது. 4000 ரூபாய் அதிகமாகவே உயர்ந்துவிட்டது. ஒரு சவரன் 70 ஆயிரம் முதல் 71 ஆயிரம் வரை போகும் என்று நினைத்தேன். அதைவிட அதிகமாகவே உயர்ந்துவிட்டது. இதேமாதிரி தொடர்ந்தது என்றால் சவரனுக்கு ரூ.85 ஆயிரத்தை தொட்டுவிடும் தங்கம் விலை.
15 சதவீதம் அதிகரித்துவிடும்
அதாவது ஜனவரி மாதத்திற்குள் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.80,000 முதல் 85,000-ஐ தொட்டுவிடும். மார்ச் மாதத்திற்கு பிறகு அடுத்த 15 மாதங்களில் பார்த்தால், தங்கம் விலையானது இதில் இருந்து 15 சதவீதம் அதிகரித்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் டாலரின் வீழ்ச்சியும், இந்த பிக் பியூட்டிஃபுல் பில்லில் கடன் (OBBB) அதிகமாக வாங்குவதாலும், இந்த விலை ஏறியிருக்கு.
அதேபோல் ஜப்பானை தவிர மற்ற நாடுகளிடம் டிரேட் டீல்ஸ் போடவில்லை என்பதால், அதுவும் ஒரு காரணம்.. அடுத்த ஆண்டு அமெரிக்காவில் இண்டெரெஸ்ட் ரேட்டை குறைக்கு ஆரம்பிக்கறப்போது தங்கம் விலை இன்னும் வேகமாக உயரும். ஆனால் எப்போ குறைக்க ஆரம்பிப்பார் என்பது நமக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications