தங்கம் விலையில் 2 நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்
சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 520 குறைந்த நிலையில் நேற்று முன்தினமும் சரிந்திருந்தது, இதன்படி தங்கம் விலை கடந்த இரண்டு நாளில் மட்டும் 864 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கொரோனா காட்டி போடப்பட்ட ஊரடங்கால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. கொரோனாவிற்கு முன்பு தங்கம் விலை 32 ஆயிரம் என்கிற நிலையில் இருந்த நிலையில் திடீரென 40 ஆயிரத்தை தாண்டியது. 40 ஆயிரம் என்கிற நிலையில் தான் இருந்து வந்தது.
ஆனால் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.43,328 என்ற புதிய உச்சத்தை தொட்டு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நகை விலை ரூ.50 ஆயிரத்திற்கு செல்லுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது.

பலரும் முதலீடு
ஏனெனில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்க இறக்குமதிக்கு கட்டுப்பாடு, உலகம் முழுவதும் நிச்சயமற்ற பொருளாதார நிலை போன்ற காரணத்தால் தங்கம் விலை உயர்ந்தது. ஆபத்தான காலத்தில் தங்கத்தில் தான் பலரும் முதலீடு செய்கிறார்கள் என்பதால் தங்கம் விலை உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது.

தங்கம் விலை திடீரென சரிவு
ஆனால் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு பிறகு பிறகு தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக ஏற்ற இறக்க நிலை காணப்பட்டது. கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் 39,664க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. ஒரு கிராம் 4,915க்கும், சவரன் 39,320க்கும் விற்கப்பட்டது.

சவரன் 864 ரூபாய் சரிவு
இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. கிராமுக்கு 65 குறைந்து ஒரு கிராம் 4,850க்கும், சவரனுக்கு 520 குறைந்து ஒரு சவரன் 38,800க்கு விற்கப்பட்டது. இரண்டு நாட்களில் மட்டும் சவரன் 864 அளவுக்கு குறைந்து உள்ளது.

தங்கம் விலை குறையும்
இந்த விலை குறைவு நகை வாங்குவோரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. அதே நேரத்தில் சவரன் 39 ஆயிரத்துக்கு கீழ் இறங்கி முதல்முறையாக நகை வாங்குவோரை இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. இன்னும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications