சனாதனத்தை அழிப்பேன் என்பது வடிகட்டிய முட்டாள்தனம்.. அழிக்க முடியாது.. கோமட சுவாமிகள் பேச்சு
சென்னை: சனாதனத்தை ஒருவர் அழிப்பேன் என்கிறார். சனாதனம் என்பது வாழ்வியல் முறை அதை அழிப்பேன் என்பது வடிகட்டிய முட்டாள்தனமான பேச்சு அதை யாராலும் அழிக்க முடியாது என்று கோமட சுவாமிகள் கூறியிருந்தார்.
சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம் என்று உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேசியிருந்தார். உதயநிதியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உதயநிதியின் பெயரைக் குறிப்பிடாமல், அவர் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். சனாதன ஒழிப்பு தொடர்பான பேச்சுக்கு உரிய பதிலடி கொடுக்கும்படி பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.
உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்துள்ளார். டெல்லி, பீகாரில் உதயநிதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உதயநிதியின் பேச்சுக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். சனாதனம் உலகிற்கு தேவையான ஒன்று என்று கூறிய ஆளுநர் ஆர்என் ரவி, சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார். சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை. சனாதனம் என்பது மரத்தின் வேர் போன்றது என்றும் வேர் இல்லாமல் மரம் வளர முடியாது, சனாதன தர்மம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்றும் ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்தார். சனாதனம் என்னும் அடிப்படையை உடைக்க முயல்வது நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சி என்றும் ஆளுநர் ஆர்என் ரவி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் சனாதனம் பற்றி இன்றைக்கு பலரும் பேசி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் புதூர் சாமிநாதபுரத்தில் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் உபன்யாசம் நடைபெற்றது. மதுரை அழகர் கோவில் கோமடம் சுவாமிகள் பேசினார். அப்போது அவர், ஆதி பகவான் புரிந்து கொள்ள இந்த அறிவு போதாது நமது அறிவு சிற்றறிவு. அதற்கு ஞானம் வேண்டும்.
ஞானம் இருந்தால் மட்டுமே பகவானை காணமுடியும். ராமாயண உபன்யாசத்தை கேட்க கோடி புண்ணியம் வேண்டும். ராமாயண நூலை பூஜையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். அந்த நூலே நமக்கு பகவான்தான். தர்மத்தை புகற்றவே ராமர் வைகுண்டத்தில் இருந்து அவதாரம் எடுத்து வந்தார்.
ஆண்கள் எல்லோரும் ராமர் போல வாழ வேண்டும். பெண்கள் எல்லோரும் சீதாபிராட்டியைப் போல வாழ வேண்டும். நாம் இருப்பது கலியுகம். இந்த யுகத்தில் ராமர் அவதாரம் உண்டு.
சனாதனத்தை ஒருவர் அழிப்பேன் என்கிறார். சனாதனம் என்பது வாழ்வியல் முறை அதை அழிப்பேன் என்பது வடிகட்டிய முட்டாள்தனமான பேச்சு அதை யாராலும் அழிக்க முடியாது. ராமர் அவதாரத்தில் பகவான் எல்லா தர்மங்களையும் காட்டிக்கொடுத்தார் என்றும் கோமடம் சுவாமிகள் கூறினார்.
ராமர் அவதாரம் செய்து 17 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. நாம் இன்னமும் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ராமயாணத்தை படித்தால் நிம்மதி கிடைக்கும். செல்வம் கிடைக்கும். வைகுண்டம் செல்லலாம் எல்லா பலன்களும் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications