கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3.50 லட்சம் மானியம்.. சொந்த வீடு கட்டுபவர்களுக்கு சூப்பர் சான்ஸ்
சென்னை: தமிழகத்தில் 2030ம் ஆண்டிற்குள் குடிசைகளே இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத இலக்கை அடைய, தமிழக அரசு 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தை அறிவித்து மிகத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் செயல்பாடுகள், சாதனைகள், என்னென்ன? இதன் பலனை பெற பயனாளிகள் என்ன செய்ய வேண்டும்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்..!!!
கிராமப்புறங்களில் பாதுகாப்பற்ற குடிசைகளிலும் ஓட்டு வீடுகளிலும் வசித்து வரும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தருவதே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

கலைஞர் கனவு இல்லம் திட்டம்
இதற்காக 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் முதற்கட்டமாக ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டும் பணிக்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வரும் சூழலில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் வீடுகள் ஊரகப் பகுதிகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தமிழ்நாடு பூர்வீகமாகப் கொண்டவராகவும், கிராமப்புறங்களில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, வீடுகள் கட்டுவதற்குத் தேவையான குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலமும் அதற்கான முறையான பட்டாவும் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
புறம்போக்கு நிலம் - சலுகை மானியம்
அதேநேரத்தில் ஏற்கனவே சொந்தமாகக் கான்கிரீட் வீடு வைத்திருப்பவர்கள், ஓடு அல்லது ஆஸ்பெட்டாஸ் சீட் போடப்பட்ட நிரந்தர வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இத்திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியில்லை... மேலும் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு தரப்பிலிருந்து 3,50,000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மூன்று நிலைகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதுதவிர கட்டுமானப் பணிகளுக்காக கூடுதல் நிதி தேவைப்படும் பட்சத்தில், பயனாளிகள் வங்கிகள் மூலம் 1,50,000 ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயனாளிகள் நிதிச்சுமை
கட்டப்படும் வீடுகள் மொத்தம் 360 சதுர அடி பரப்பளவில் சமையல் அறையுடன் கூடிய வசதிகளுடன் அமையும். இதில் 300 சதுர அடி பரப்பளவு ஆர்சிசி கூரையுடன் அமைக்கப்பட வேண்டும், மீதமுள்ள பகுதியை பயனாளிகளின் விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம். கட்டுமானத்தில் செங்கல், இன்டர்லாக் சிஸ்டம் அல்லது ஏஏசி பிளாக் போன்ற தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
பயனாளிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், அரசு நிறுவனமான டான்செம் (TANCEM) மூலம் குறைந்த விலையில் சிமெண்ட் வழங்கப்படுகிறது... அதேபோல அரசு அங்கீகாரம் பெற்ற சப்ளையர்களிடமிருந்து தரமான இரும்புக் கம்பிகளும் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
சான்றிதழ்கள் - ஆவணங்கள்
பயனாளிகளை தேர்வு செய்யும் முறை மிகவும் வெளிப்படையானது. அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையிலான குழுவினர் தகுதியான விண்ணப்பங்களை ஆய்வு செய்து, கிராம சபையின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இறுதிப் பட்டியலைத் தயாரிப்பார்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் பொதுமக்கள் தங்களின் பட்டா, சிட்டா, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்... தமிழக அரசின் இந்தச் சீரிய முயற்சி, விளிம்பு நிலை மக்களின் கனவை நனவாக்குவதுடன், கிராமப்புறக் கட்டமைப்பில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை...!!












Click it and Unblock the Notifications