சென்னைக்கு நற்செய்தி.. சோழவரம் தந்த குட்நியூஸ்.. பூரித்த மகிழும் பூண்டி.. அப்பாடா, இனிமே கவலையில்லை
சென்னை: சென்னை உட்பட தமிழகமெங்கும் வெயில் அதிகரித்து வருவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிடுமோ என்ற கலக்கம் சூழ்ந்தது.. ஆனால், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்றும் நம்பிக்கை தந்துள்ளார்கள்.
தமிழகமெங்கும் வெப்பம் மண்டையை பிளந்து வருகிறது. இன்னும் கத்தரி வெயிலே ஆரம்பிக்கவில்லை.. அதற்குள் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது...

வெப்பநிலை: கடும் வெப்பம் காரணமாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும் 5 ஏரிகளில் தண்ணீர் ஆவியாகி வருகிறது... இந்த நிலை தொடரும் பட்சத்தில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
காரணம், சென்னைக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை (நீர்த்தேக்கம்) ஏரிகளில் தண்ணீர் குறைந்துள்ளது. அதாவது கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இருந்த தண்ணீர் இருப்பை ஒப்பிடும்போது புழல் ஏரியை தவிர இப்போது பிற ஏரிகளில் தண்ணீர் இருப்பு சரிந்துள்ளதாக கடந்த வாரம்கூட செய்திகள் வெளியாகியிருந்தன.
5 ஏரிகள்: கடந்த ஏப்ரல் மாதம் இந்த 5 ஏரிகளிலும் 8.5 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருந்த நிலையில், இப்போது வெறும் 7.1 டிஎம்சி தண்ணீர் தான் உள்ளதாம்.. இது கடந்த ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 1.4 டிஎம்சி குறைவு என்கிறார்கள்.. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி புழல் ஏரியில் 2418 மில்லியன் கியூபிக் அடி தண்ணீர் இருந்தது. இப்போது, கடந்த ஆண்டை விட கூடுதலாக தண்ணீர் உள்ளது. அதன்படி புழல் ஏரியில் 2849 மில்லியன் கியூபிக் அடி உள்ளது.
மற்ற ஏரிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.. ஆனால், இந்த 5 ஏரிகளிலுமே 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் மொத்தம் 6 ஆயிரத்து 702 மில்லியன் கனஅடி(6.7டி.எம்.சி) தண்ணீர் இருப்பு உள்ளது.
நீர்த்தேக்கம்: பூண்டி ஏரியில் 898 மில்லியன் கனஅடியும் (மொத்த கொள்ளளவு 3231மி.கனஅடி), சோழவரம் ஏரியில் 108 மில்லியன் கனஅடியும் (மொத்த கொள்ளளவு 1081) தண்ணீர் குறைந்த அளவே உள்ளன. இப்போது, கோடை கொளுத்தி கொண்டிருப்பதால், நீர் ஆவியாதலை தடுக்கும் வகையில் இந்த 2 ஏரிகளில் உள்ள தண்ணீரையும் புழல் ஏரிக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறதாம்.
இப்போது குடிநீர் ஏரிகளில் உள்ள 6.7 டி.எம்.சி. தண்ணீரை வைத்து சென்னையில் இன்னும் 6 மாதத்திற்கு தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்பதால், இனி வரும் மாதங்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்..
அதுமட்டுமல்ல, பூண்டி ஏரியில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருவதால் கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திரமாநிலம் கண்டடேறு அணையில் இருந்து தண்ணீரை பெறவும் நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications