கூட்டுறவுத்துறை பயிர்க்கடனில் குட்நியூஸ்? நபார்டு வங்கி கதவை தட்டிய அரசு.. விவசாயிகளுக்கு ஹேப்பி
சென்னை: பயிர்க்கடன் விவசாயிகளுக்கு பல்வேறு வழிகளில் துணை நிற்கும் நிலையில், அதன் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விதை முதல் அறுவடை வரை செலவுகளை சமாளிக்க பயிர்க்கடன் முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த சூழலில், தமிழக கூட்டுறவுத்துறை நபார்டு வங்கியை அணுகியுள்ளது. மேலும் பயிர்க்கடன் வழங்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... இதுகுறித்து இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
கூட்டுறவு வங்கிகள்
விவசாயிகளின் நலனுக்காக நம்முடைய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், நபார்டு வங்கி அதாவது விவசாயம் மற்றும் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தேசிய வங்கியானது, பயிர்க்கடன் வழங்கி வருகிறது.

ஆனால், இது நேரடியாக விவசாயிகளுக்கு கடன் தராமல், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்குகிறது. இதனால் கிராம மட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கும் வங்கி கடன் எளிதாக கிடைக்கிறது.
பயிர் சாகுபடிக்கான ஆரம்ப செலவுகளை சமாளிக்க இந்த கடன் பெரும் உதவியாக உள்ளது. குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதால் வட்டிக்கடன் சுமை குறைந்து, உணவு உற்பத்தி மற்றும் கிராமப்புற பொருளாதாரமும் வலுப்பெறுகிறது.
சுருக்கமாக சொன்னால், விவசாயம் நின்று போகாமல் தொடர வேண்டும், விவசாயிகள் கடன் சுமையில் சிக்காமல் இருக்க வேண்டும், கிராமப்புற வளர்ச்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, நபார்டு வங்கி பயிர் கடனை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
நபார்டு வங்கி - பயிர் கடன்
அந்தவகையில், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன்களுக்கு 7 சதவீத வட்டி விதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, விவசாயிகள் குறித்த காலத்திற்குள் கடன் தொகையை திருப்பி செலுத்திவிட்டால், அந்த வட்டி முழுவதும் அரசால் தள்ளுபடி செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு சார்பில் கூட்டுறவு மாநாடு, சென்னையில் நடைபெற்றது..
இந்த மாநாட்டில் அமைச்சர் பெரிய கருப்பன் பேசும்போது, தமிழக விவசாயிகளுக்கு, கூட்டுறவு வங்கிகளில் இந்த வருடம் 20,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்குவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..
தமிழக கூட்டுறவுத்துறை
குறுகிய கால பயிர்க் கடனுக்கான நிதியாக நபார்டு 18.65 சதவீதம் அதாவது, 3800 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இதனை 50% அளவிற்கு உயர்த்தி வழங்கினால், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் பயன்பெறும் என்று கோரிக்கை விடுத்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
அதுமட்டுமல்ல, தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கியிடம் இருந்து, 10000 கோடி ரூபாயை கடனாக பெற கூட்டுறவு துறை விண்ணப்பித்திருந்தது.
விவசாயிகளுக்கு ஹேப்பி
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் பணியை தீவிரப்படுத்த, தமிழக கூட்டுறவு துறை, நபார்டு வங்கியிடம் இருந்து மேலும் 2,000 கோடி ரூபாய் கடன் கோரியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. .
இதுவரை நபார்டு வங்கி 3,800 கோடி ரூபாயை மட்டுமே ஒப்புதல் அளித்து வழங்கியுள்ள நிலையில், அதனை பயன்படுத்தி, மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சுமார் 9 லட்சம் விவசாயிகளுக்கு, 11,000 கோடி ரூபாய் அளவுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது..
பயிர்க்கடன் - நம்பிக்கை
மீதமுள்ள விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு, மேலும் 2,000 கோடி ரூபாய் கடன் வழங்குமாறு, நபார்டு வங்கியிடம் தமிழக கூட்டுறவு துறை மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த கோரிக்கைக்கு நபார்டு வங்கி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், பயிர் சாகுபடிக்கு தேவையான நிதி வசதி விவசாயிகளுக்கு விரைவாக கிடைக்கும் என்றும், விவசாய உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உருவாகும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications