பொதுச்செயலாளர் பதவி வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு குட் நியூஸ்! சுப்ரீம்கோர்ட் உத்தரவால் அதிமுக குஷி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சுப்ரீம்கோர்ட்டு..
அண்ணா திமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

பொதுச்செயலாளர் நியமன அறிவிப்பு
பொதுச் செயலாளர் நியமன அறிவிப்பை எதிர்த்தும், இந்த பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் அதிமுக தொண்டர் எனக் கூறி திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், "அதிமுக விதிகளின்படி பொதுச்செயலாளரை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படவில்லை.
பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவரது தேர்வு செல்லாது என்று அறிவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
செல்லாது செல்லாது
இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.
இந்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
சுப்ரீம் கோர்ட் போன சூரிய மூர்த்தி
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சூரியமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தன்னுடைய மனுவில், "என்னை அதிமுக கட்சியின் உறுப்பினர் கிடையாது என்றும், இந்த வழக்கை தாக்கல் செய்ய எனக்கு உரிமை இல்லை என்றும் கூறப்பட்டதில் எந்தவித முகாந்திரமும் இல்லை. இது சட்ட விதிகளுக்கு முரணானது.
எனவே, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து, அதனை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இன்று எடப்பாடிக்கு எதிரான மனு விசாரணை
இந்த உத்தரவை எதிர்த்து சூரிய மூர்த்தி சார்பில் வக்கீல் அனில் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே அமர்வு இன்று அதாவது வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக தகவல் வெளியானது..
சட்டசபை தேர்தல் தமிழகத்தில் நெருங்கும் நேரத்தில், கூட்டணி விவகாரம், சீட் பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் அதிமுகவுக்குள் தொடங்கி உள்ள நிலையில் இன்றைய தினம் நடக்க போகும் வழக்கு விசாரணை, அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக வழக்கறிஞர் சூரியமூர்த்தி தொடர்ந்த மேல்முறையீட்டை வழக்கை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான உத்தரவாக பார்க்கப்படுகிறது...!!












Click it and Unblock the Notifications