குட்நியூஸ்.. நாம் பாதி கிணற்றை தாண்டிவிட்டோம்.. 20 நாளைக்கு பின் தமிழகத்தில் முதல் முன்னேற்றம்!
சென்னை: மக்களே பாதி கிணற்றை தாண்டிவிட்டோம். இன்னும் கொஞ்சம் தான், 20 நாளுக்கு பின் முதல் முறையாக 30 ஆயிரத்திற்கு கீழாக கோவிட் பாதிப்பு தமிழகத்தில் வந்துள்ளது. எனவே வீட்டிலேயே நாம் பாதுகாப்பாக இருந்தால் அடுத்த இரண்டு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளது.
மார்ச் இறுதியில் அதிகரிக்க தொடங்கி கொரோனா, ஏப்ரல் 6ம் தேதி நடந்த தேர்தலுக்கு பிறகு மிகப்பெரிய உச்சத்தை தொட ஆரம்பித்தது. ஆயிரத்தில் இருந்து ஐந்தாயிரம், பத்தாயிரம், 20 ஆயிரம் என உயரத் தொடங்கியது.
தஞ்சை மருத்துமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து கொடுத்த துபாய் தொழில் அதிபர்!
ஆனால் துரதிஷ்டவசமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காரணத்தால் பெரிய அளவில் ஊரடங்குகள் போடப்படவில்லை. எனினும் பாதிப்பு எண்ணிக்கை 20ஆயிரத்தை தாண்டிய பின்னர் ஏப்ரல் இறுதியில் இரவு நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் தொற்று குறையவில்லை.
கடைசி 10 நாட்கள்
இதற்கிடையே மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து திமுக ஆட்சிக்கு வந்தது. ஸ்டாலின் முதல்வரானார். அடுத்த சில நாளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போக்குவரத்தும் மே 10ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. கடும் ஊரடங்கு அமலில் இருந்தபோதும் கடந்த 20 நாட்களாக பாதிப்பு குறையாமல் இருந்தது. ஆனால் கடைசி 10 நாட்கள் மிக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக மாற்றம் வரத் தொடங்கி உள்ளது.
பலன் கிடைத்தது
குறிப்பாக தளர்வுகளற்ற ஊரடங்கு தொடங்கிய 24ம் தேதியில் இருந்து மெல்ல மெல்ல பாதிப்பு குறைய தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 20 நாட்களாக 30 ஆயிரத்திற்கு மேல் இருந்து வந்தது. ஆனால் முதல் முறையாக 20 நாளைக்கு பின் இன்று தொற்று எண்ணிக்கை 28,864 ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்பவர்களின் விகிதம் 20 சதவீதத்தில் இருந்து 17.8 சதவீதம் ஆக சரிந்துள்ளது.
மீண்டவர்கள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 32,982 பேர் மீண்டுள்ளனர் . இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 17,39,280 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நோயாகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது.
சரிந்தது பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை மே 28ம் தேதி 3,12,386 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை நேற்று 3,10,157 ஆக குறைந்தது. இந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 3,05,546 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதாவது ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் 18 சதவீதம் ஆக சரிந்துள்ளது.
வீட்டிலயே இருப்போம்
சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மேற்கு மாவட்டங்களில் மட்டும் அதிகமாக உள்ளது. ஆனால் அங்கும் இன்று முதல் குறைய தொடங்கி உள்ளது. எனவே நாம் பாதி கிணற்றை தாண்டிவிட்டோம். வீட்டிலேயே விழிப்புடன் இருந்தால் அடுத்த இரண்டு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளது.