அரசின் பஸ் ரூல்ஸ் மாறியது.. கண்டக்டர், டிரைவர்களுக்கு பறந்த உத்தரவு.. பேருந்துகளில் இனி இது கட்டாயம்
சென்னை: அரசு பஸ் டிரைவர்கள் செல்போன் பேசிக்கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்கக்கூடாது, அப்படி பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக முக்கிய அறிவுறுத்தல் ஒன்றையும் மாநகர போக்குவரத்துக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
எப்போதுமே பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதில் நம்முடைய தமிழக போக்குவரத்து துறை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.. இதற்காகவே சிரத்தையுடன் பல்வேறு உத்தரவுகளையும் அடிக்கடி பிறப்பித்து வருகிறது.

அரசு பஸ் டிரைவர்கள்
பஸ் டிரைவர்களுக்கும், கண்டக்டர்களுக்கும், போக்குவரத்து துறை அடிக்கடி அறிவுரைகளையும் வழங்கி வருகிறது. ஆனாலும், ஒருசில டிரைவர்கள், ஒரு கையில் செல்போனில் பேசிக்கொண்டே மறு கையில் பஸ்சை ஓட்டுவதுமாக இருக்கிறார்கள்..
வாகனம் ஓட்டும்போது போன் பயன்படுத்தக்கூடாது என்பது விதி. பொதுவாக டூ வீலர் , கார் டிரைவர்கள் போன் பயன்படுத்தினால், போக்குவரத்து போலீஸார் எளிதில் கண்டுபிடித்து கண்டிப்பார்கள். ஆனால், பஸ் டிரைவர்கள் போன் பேசிக்கொண்டே பஸ்ஸை ஓட்டினால் எளிதில் கவனிக்க முடிவதில்லை..
பேருந்து ஓட்டுநர்கள் அசால்ட்டு
அதுமட்டுமல்ல, இப்படி டிரைவர்கள் போனில் பேசிக்கொண்டே பஸ்ஸை ஓட்டுவதால், விபத்துக்கள்தான் அதிகம் ஏற்படுகின்றன. அரசு பேருந்து ஓட்டுனர்கள் செல்போனை பார்த்த படியும், போனில் பேசியபடியும் பஸ்ஸை ஓட்டுவதாக இயக்குவதாக பயணிகள் தொடர்ந்து புகார்களையும் தந்து வருகிறார்கள்..
இப்படி டிரைவர்கள் யாராவது பொறுப்பற்ற முறையில் பஸ் ஓட்டுவது தெரிந்தால், பஸ்ஸிலுள்ள பயணிகளே இதை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டும் விடுகிறார்கள்.
பஸ்ஸை ஓட்டிக்கொண்டே செல்போன்
இந்த வீடியோக்கள் வைரலானதுமே, இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் சம்பந்தப்பட்ட டிரைவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படுகிறது..
அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று போக்குவரத்துத்துறை பலமுறை எச்சரித்து, செய்திக்குறிப்பையும் வெளியிட்டிருக்கிறது. அப்போதும்கூட ஒருசில டிரைவர்கள் இந்த உத்தரவை அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.
இந்நிலையில், ஓட்டுனர்கள் செல்போன் பேசிக் கொண்டு பேருந்தை இயக்குவது அதனை தடுக்க அனைத்து கிளை மேலாளர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய நடவடிக்கையை தற்போது மேற்கொண்டுள்ளது..
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இதனை ஆய்வு செய்யும் போது சில ஓட்டுனர்கள் பேருந்தை இயக்கும்போது செல்போன் பேசிக் கொண்டே இயக்குவதை பொது மக்கள் புகார் மற்றும் பேருந்தின் CCTV Camera மூலம் கண்டறியப்படுகிறது.
கண்டக்டரிடம் போன் தந்துவிட வேண்டும்
இவ்வாறு ஓட்டுனர்கள் செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை இயக்கும் போது கவனச் சிதறல் ஏற்பட்டு சாலை விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே இனிவரும் காலங்களில் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் ஓட்டுநர்கள் தங்கள் பணியின் போது தங்களது செல்போன்களை தன்னுடன் பணி செய்யும் நடத்துனரிடம் கொடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் பணி முடிந்த பிறகு செல்போனை நடத்துனரிடமிருந்து பெற்று செல்ல வேண்டும். ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன்கள் வைத்திருப்பதை பரிசோதகர்கள் மற்றும் அலுவலர்கள் மூலம் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரிவித்து கொள்ளப்படுகிறது" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications