சைபர் கிரைம்களை தடுப்பது பற்றி சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
சென்னை: இணையதள குற்றங்களை தடுப்பது பற்றி சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதள பிரதிநிதிகளுடன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

யூ டியூப், பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன் மே 20 முதல் 27-ம் தேதிக்குள் ஆலோசனை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக்கு பின்னர் வரும் ஜூன் 6-ம் தேதிக்குள் தலைமைச்செயலாளர் விரிவான அறிக்கையையும், சமூக வலைதள நிறுவனங்கள் பதில் மனுவையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள், மின்னஞ்சல் கணக்குகளை, துவக்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க உத்தரவிட கோரி ரூபன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் சமூக வலைதளங்கள் மூலமாக தனிநபருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக சாடியிருந்தார். சைபர் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் பேஸ்புக், ட்விட்டர், ஜி மெயில் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களையும் ஆதாருடன் இணைப்பதைக் கட்டாயமாக்க உத்தரவிட மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இணையதள குற்றங்களை தடுப்பது பற்றி சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications