தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வேண்டுமா? ஆதார் எண் கட்டாயம் என அரசாணை
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடு பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நலத்திட்டம் பெறுவோர் ஆதார் வைத்திருக்க வேண்டும்.. பயனாளிகள் நலத் திட்டங்களுக்காக விண்ணப்பிக்கும் முன்னதாக, ஆதார் எண்ணைப் பெற வேண்டும் என்றும் அரசாணையில் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் 1970-ஆம் ஆண்டில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தை தொடங்கி வைத்தார். குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் முதன்மையான நோக்கமாகும்.

நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களுக்குக் குடிநீர். சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதிகளை ஏற்படுத்துவதும் அவசியம் என்று கருதி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தில் சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்கு வீடுகளைத் தாமதமின்றி வழங்கப்பட்டு வருகிறது.
வீடற்ற மக்களுக்கு வீட்டினை அளிப்பதோடு இக்குடியிருப்புகளில் ஒரு பல்நோக்கு அறை, உறங்கும் அறை, சமையலறை, கழிவறை வசதிகளும், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வசதி, மின்தூக்கி, சாலைகள், தெருமின் விளக்குகள், கான்கிரீட் நடைபாதை, மழைநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளுடன் ஏற்படுத்தி தரப்படுகிறது.
மேலும், சமூக வசதிகளான பள்ளிகள், நூலகம், பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், சிறுகடைகள், பால் விற்பனை நிலையம், சமுதாயக்கூடம் போன்ற வசதிகள் குடியிருப்புகளின் அருகில் அமைந்திட ஆவன செய்திடுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 92 திட்டப் பகுதிகளில் 3,197.94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு வீடற்ற ஏழை எளிய மக்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகளை பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில்," பயனாளிகள் நலத் திட்டங்களுக்காக விண்ணப்பிக்கும் முன்னதாக ஆதார் எண்ணைப் பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள ஆதார் மையத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது திட்டத்தை செயல்படுத்தும் துறைகள் மூலமாக பயனாளி ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளைச் செய்து கொடுக்கலாம் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆதார் எண்ணைப் பெறும் வரை விண்ணப்பித்ததற்கான அடையாளச் சான்று அல்லது புகைப்படத்துடன் கூடிய வங்கிப் புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, கிசான் அட்டை, ஓட்டுநர் உரிமம், தாசில்தார் அல்லது சான்றொப்பமிடும் தகுதியான அதிகாரிகள் அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய கடிதம், ஏதேனும் துறையில் இருந்து வழங்கப்பட்ட சான்று ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications