சென்னை அம்பத்தூர் கூட்டுறவு வங்கியில் சுற்றிவளைக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி.. அந்த டம்ளர் தான் மேட்டரே
சென்னை: சென்னை அம்பத்தூர் கூட்டுறவு சங்க அதிகாரி, கடன் பத்திரத்தை ரத்து செய்ய விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கினார். டம்ளரில் வைத்து கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக ஆறுமுகம் (வயது 50) பணியாற்றி வந்தார்.இங்கு திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை சேர்ந்த 52 வயதாகும் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயியின் தந்தை பூந்தமல்லி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து வாங்கிய கடன் வாங்கி உள்ளார். அந்த கடனை முறையாக திருப்பி செலுத்தி விட்டார்.

ஆனால் கடன் பத்திரத்தை ரத்து செய்வதற்குள் கிருஷ்ணமூர்த்தியின் தந்தை இறந்துவிட்டார். இதனால் அந்த கடன் பத்திரத்தை ரத்து செய்யக்கோரி கிருஷ்ணமூர்த்தி மனு கொடுத்து இருந்தார். அம்பத்தூர் கூட்டுறவு சங்க செயலாளரான ஆறுமுகம்தான் பூந்தமல்லி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்திருக்கிறார்.
இதனால் அவர், ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் கடன் பத்திரத்தை ரத்து செய்வதாக கூறியிருக்கிறார். ஆனால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என கிருஷ்ணமூர்த்தி கூறியதால் ரூ.40 ஆயிரம் ரூபாயாவது தரும்படி ஆறுமுகம் கேட்டாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணமூர்த்தி, இதுகுறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
அதேநேரம் டிஎஸ்பி ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடிக்க ரசாயன பொடி தடவிய ரூ.40 ஆயிரத்தை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி உள்ளார்கள்.
அதன்படி நேற்று காலை விவசாயி கிருஷ்ணமூர்த்தி, ரசாயன பொடி தடவிய லஞ்சப் பணத்துடன் அம்பத்தூர் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு போயிருக்கிறார். பின்னர் வெளியே நின்றபடி கூட்டுறவு சங்க செயலாளர் ஆறுமுகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
அப்போது ஆறுமுகம், டீ கொடுப்பது போல் டம்ளரில் பணத்தை வைத்து கொண்டு வந்து தருமாறு கூறியிருக்கிறார். அதன்படி கிருஷ்ணமூர்த்தி, லஞ்சப் பணத்தை டம்ளரில் வைத்து அதனை ஆறுமுகத்திடம் கொடுத்திருக்கிறார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாய்ந்து சென்று ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தார்கள்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கைதான கூட்டுறவு சங்க செயலாளர் ஆறுமுகத்தை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications