"டாஸ்மாக் ஊழியர்களை கொத்தடிமைகள் போல் நடத்தும் தமிழக அரசு" சீமான் கண்டனம்!
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நுகர்பொருள் வாணிப கழகத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனை கூட ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் காலம் கடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
20 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் பணியாற்றியும் இதுவரை உரிய ஊதியம் கூட வழங்காமல் கொத்தடிமைகள் போல நடத்தும் தமிழ்நாடு அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுங்கோன்மையாகும்.

பூரண மதுவிலக்கு
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி, அதில் பணியாற்றும் ஊழியர்களை வேறு அரசுப் பணிகளுக்கு மாற்றவேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் முதன்மையான நீண்டகால கோரிக்கை என்ற போதிலும், மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வரை, அதில் பணியாற்றும் 27000 ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் தமிழர் கட்சி உறுதியாக இருக்கிறது.

பணி நிரந்தரம் செய்க
கடந்த 20 ஆண்டுகளாக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றி வரும் உதவி விற்பனையாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு இன்று வரை தொகுப்பூதியத்தின் கீழ் மிக குறைந்த அளவு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரையும் நுகர்பொருள் வாணிப கழகத்தின் இதர விற்பனை பிரிவுகளான அமுதம் அங்காடி, ஆவின் மற்றும் பூம்புகார் கைவினைக் கூடங்களில் பணிபுரியும் ஊழியர்களை போன்று காலமுறை ஊதியத்துக்கு மாற்றி உடனடியாக பணி நிரந்தரமும் செய்திட வேண்டும்.

ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டு
மேலும், டாஸ்மாக் ஊழியர்களை ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பந்தாடுவதை தடுக்க, அவர்களின் பணியிட மாறுதலுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி விரைந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மதுக்கூடங்களை நடத்தும் ஆளுங்கட்சியினர் விற்பனை நடவடிக்கைகளில் தலையிட்டு ஊழியர்களை மிரட்டி, தாக்கும் போக்கினையும் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.

சீமான் வலியுறுத்தல்
ஆகவே, தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனை கூட ஊழியர்களின் மேற்கண்ட நியாயமான கோரிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications