ஆளுநர் ரவி மனைவிக்கு திடீர் உடல்நலக் குறைவு! தனியார் மருத்துவமனையில் அனுமதி! முழு விவரம்!
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவின் மனைவி லட்சுமிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் அளித்த சிகிச்சையை தொடர்ந்து ஓய்வெடுத்து வரும் லட்சுமி ரவி, இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காய்ச்சல் காரணமாக ஏற்பட்ட செரிமானக் கோளாறால் ஆளுநர் ரவியின் மனைவிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.

ஆளுநர் ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் வெளியூர் சுற்றுப்பயணங்களின் போது அவருடன் ஒன்றாக பயணிக்கக் கூடியவர் அவரது மனைவி லட்சுமி ரவி. உணவு பழக்க வழக்கத்தில் மிகுந்த கவனமுடன் இருக்கக்கூடிய இவருக்கு காய்ச்சல் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட செரிமானக் கோளாறால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட லட்சுமி ரவி அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லட்சுமி ரவி
அவருக்கு பரிசோதனைகள் நடத்திய மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சையும் அளித்து வருகிறது. தற்போது ஓரளவு குணமடைந்து விட்டாலும் கூட மருத்துவமனையிலேயே ஓய்வெடுத்து வருகிறார் லட்சுமி ரவி. இன்னும் ஓரிரு நாட்களில் ஆளுநரின் மனைவி லட்சுமி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே மனைவியின் உடல்நலம் பற்றி மருத்துவர்களிடம் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார் ஆளுநர் ரவி.

மழைக்காலம்
தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வானிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் சாதாரண காய்ச்சல் தான் என மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. ஆளுநர் ரவியின் மனைவி லட்சுமி உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள லட்சுமி ரவிக்கு, மூத்த செவிலியர்கள் குழு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

அலுவல் பணி
மனைவி லட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலிலும், ராஜ் பவனில் தனது வழக்கமான அலுவல் பணிகளை எப்போதும் போல் ஆளுநர் ரவி கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications