ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் வரலாறு தெரியாமல் எதையெதையோ பேசுகிறார்.. அமைச்சர் பொன்முடி காட்டம்
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி பீகாரில் இருந்து வந்தவர் என்றும் அவருக்கு தமிழ்நாட்டின் வரலாறே தெரியாது என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசின் செயல்படுகள் குறித்து மறைமுகமாக அவ்வப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி சாடி வருகிறார்.

தமிழக முதல்வர் சமீபத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தை ஆளுநர் மறைமுகமாக விமர்சித்தார். வெளிநாடு சென்று பேசி அழைப்பதால் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள். அதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதுவே அவர்களை ஈர்க்ககூடியதாக இருக்கும் என்று ஆளுநர் சாடியிருந்தார். இதற்கு மறுநாளே ஆளுநரின் பேச்சுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மறைமுகமாக பதிலடி கொடுத்து இருந்தார்.
இப்படி ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், நெல்லை மானோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் இருப்பதாகவும் இதற்கு ஆளுநர் தான் காரணம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் ஆளுநர்தான் இதற்கு காரணம் என்று கூறியிருந்தார். இப்படி பல விவகாரங்களில் தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் ,ஆளுநரை கடுமையாக விமர்சித்து அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, "பீகாரில் இருந்து ஒருவர் வந்து இருக்கார். யாரு... கவர்னர்..
அவருக்கு தமிழ்நாட்டில் என்ன இருக்கிறது.. எப்படி வளர்ந்தது என்ற வரலாறு எல்லாம் தெரியாது. எதுவுமே தெரியாமல் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறார். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி.. பெண்கள் வளர்ச்சி. .உயர்கல்வி வளர்ச்சி என எல்லா வகையிலும் பாடு பட்டு கொண்டு இருக்கிறோம். கலைஞர் வழியில் ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது" என்றார்.
முன்னதாக நேற்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் மு.க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் ஆளுநர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதாவது, இன்னும் பல மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி கொடுக்காமலே இருக்கிறார். இது சம்பந்தமாக தெலுங்கானா அரசு கூட ஆளுநரை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார்கள். அதுபோன்று வாய்ப்பு உள்ளதா? எனக் கேட்டனர். இதற்கு பதிலளித்த முதல்வர் நாங்களும் நீதிமன்றத்தை நாடலாமா என்று சட்ட வல்லுனர்களோடு கலந்து பேசிக்கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications