நீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி
திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்த நீட் தேர்வு ரத்து பற்றி ஆளுநர் உரையில் இல்லை என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, மாணவர்கள் வாங்கிய கல்வி கடன் ரத்து செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் எதுவும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை என்று தமிழக சட்டசபையின் எதிர்கட்சித்தலைவரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
16ஆவது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று உரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் இன்றைய தினம் ஆளுநர் ஆற்றிய உரை பெரும் ஏமாற்றமளிப்பதாக தெரிவித்தார்.
கொரோனா பரவலைத் தடுக்க அரசு தவறி விட்டது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. கொரனோ பரிசோதனையில் குளறுபடி நடக்கிறது என்றும் குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.

எதுவும் இல்லை
திமுக ஆட்சி அமைத்து 44 நாட்கள் ஆகின்றன. இன்னும் பயிர் கடனை ரத்து செய்த ரசீது வழங்கப்படவில்லை. மாணவர்கள் வாங்கிய கல்வி கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தது திமுக. அதைப் பற்றியும் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.

மாறி மாறி பேச்சு
திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்த நீட் தேர்வு ரத்து பற்றி ஆளுநர் உரையில் இல்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் வரும்போது ஒரு பேச்சு தேர்தலுக்கு பின் ஒரு பேச்சு என்று திமுக நிலை இருக்கிறது.

அறிவிப்பு இல்லையே
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய திமுகவின் நிலைப்பாடு தற்போது மாறியுள்ளது. மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் போன்ற அறிவிப்புகள் இடம் பெறவில்லை

100 ரூபாய் மானியம்
முதியோர் உதவித்தொகையை ரூ.1,500 ஆக உயர்த்துவது, கேஸ் சிலிண்டருக்கு ரூ 100 ரூபாய் மானியம், முக்கிய பிரதான பிரச்சினையான கோதாவரி ஆறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட ஏதும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை ஏமாற்றம் தருவதாக உள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications