ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை.. நாங்க செய்வதைத்தான் அரசியலாக்கிவிடுகிறார்கள்! தமிழிசை பேச்சு!
சென்னை: ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை, ஆளுநர்களின் நடவடிக்கைகள் தான் அரசியலாக்கப்படுகிறது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் இரட்டை மலை சீனிவாசனின் பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள சிலைக்கு மரியாதை செலுத்த தமிழக அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையொட்டி இரட்டைமலை சீனிவாசன் படத்திற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் மரியாதை செலுத்தினார்.

இரட்டைமலை சீனிவாசன்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, இரட்டைமலை சீனிவாசனுக்கு மரியாதை செலுத்துவதில் பெருமைப்படுகிறேன். அம்பேத்கரோடு இணைந்து பட்டியலின மக்களுக்காக மாபெரும் புரட்சியை செய்தவர். தனித்துவிடப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதி கிடைக்க முக்கியக் காரணம் இரட்டைமலை சீனிவாசன் தான். தமிழ் என்று பேசுபவர்கள் கூட தமிழில் கையெழுத்து போடாமல் இருக்கும் சூழலில், மகாத்மா காந்திக்கு தமிழில் கையெழுத்திட கற்றுக் கொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன். முடிந்தவரை அனைவரும் தமிழில் கையெழுத்திட பழகிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

நடராஜர் கோவில் விவகாரம்
தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனக்கும் நடராஜருக்கும் இடையில் நாரதர் தேவையில்லை. நடராஜருக்கு அபிஷேகம் செய்வது தெரிய வேண்டும் என்பதற்காக என்னை ஒரு இடத்தில் அமர வைத்தார்கள். அப்போது அங்கே வந்து ஒருவர் என்னை எழுந்து போக கூறினார். நான் இங்கே இருக்கிறேன் என்று கூறினேன். ஒருவர் அப்படி செய்தார் என்பதற்காக அனைவரையும் குற்றம் சொல்ல முடியாது. அவர் என்ன நோக்கத்திற்காக இடம் மாற கூறினார் என்பது தெரியாது. யாரையும் அவமரியாதை செய்வது சரியானதல்ல. எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவர்கள் கொடுத்தார்கள். கோவிலில் எனக்கு எந்த வருத்தமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை
ஆளுநர்கள் சுறுசுறுப்பாக இருப்பதால் பரபரப்பாக இருக்கிறது. இந்தியாவில் அனைத்து ஆளுநர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகிறார்கள். ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை. ஆளுநரின் நடவடிக்கைகள் மற்றவர்கள் அரசியலாக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

காரைக்காலில் காலரா
காரைக்காலில் காலராவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் கட்டுக்குள் இருக்கிறது. நிச்சயம் காலரா பரவுகிறது. இதனால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காலராவை கட்டுப்படுத்த நீர்நிலைகளை சரிசெய்ய வேண்டிய தேவை உள்ளது. புதிய பைப்லைன்கள் போடப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications