சீன நிறுவனங்களுக்கு நிலம்.. ஆனால் அடி மடியில் கை வைத்து விட கூடாது.. விவசாய நிலங்கள் அழிஞ்சுட கூடாது
நம் விவசாய நிலங்கள் அழிந்துவிடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்
சென்னை: சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுக்க தீவிர முயற்சிகள் நடைபெற்ற வருகிறது.. அதனால் பலரும் நம்மிடம்தான் வரப் போகின்றனர். அப்படி வந்தால், அவர்களுக்கு பெரிய அளவில் நிலம் கொடுக்கவும் அரசுகள் தயாராகி வருகின்றன. அப்படி நிலங்களை தரும்போது நம்முடைய முதுகெலும்பான விவசாய நிலமும் சேர்ந்து தாரை வார்க்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது!!
Recommended Video
உலகம் முழுவதும் ஆட்கொண்டிருக்கும் கொரோனாவால் பொருளாதாரம் அதல பாதாளத்தில் அவரவர் நாட்டிற்குள் சென்று கொண்டிருக்கிறது.. அதை தூக்கி நிறுத்த உலக நாடுகள் முயன்று வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் ஒன்று.. பங்கு சந்தை வீழ்ச்சி முதல் தங்கம் விலை உயர்வு வரை தினமும் நம்மை மிரட்டி வருகின்றன.
இப்போதைக்கு உலக நாடுகளிலேயே கொஞ்சம் நிம்மதியாக உள்ளது சீனாதான்.. உலக நாடுகளுக்கு பெருமளவு வைரஸ் பரவிய அதே நேரம், முதன்முதலில் பாதிக்கப்பட்ட தன்னுடைய நகரங்களில் பொருளாதார மண்டலங்கள் சீர்குலையாமல் அதே கட்டுக்கோப்புடன் வைத்துள்ளது.
ஏறுமுகம்
உலக நாடுகளில் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்லும் நிலையில், சீனாவுக்கு ஏறுமுகமாகவும் உள்ளது.. இப்போதைக்கு எல்லா நாடுகளுமே பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவின் உதவியை பல நாடுகள் எதிர்கொண்டுள்ளன.. சில நாடுகள் சீனாவின் போக்கு பிடிக்காமல் விலகல் போக்கை கையில் எடுத்துள்ளது.. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளன. அதை தற்போது இந்தியா தனக்கு சாதகமாக மாற்றப் பார்க்கிறது.
வரவேற்பு
சீனாவிலிருந்து விலக விரும்பும் நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இங்கு வந்து தொழில் செய்யலாம் என வரவேற்றுள்ளது. இதற்காக நிலம் தரவும் இந்தியாவின் பல மாநிலங்கள் தயாராகி வருகின்றன. அதற்காக பெருமளவு நிலங்களை வாரி வழங்க அரசு தயாராக இருப்பதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன... ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் நாட்டின் அளவுக்கு மிகப் பெரிய நிலப்பரப்பை மத்திய மாநில அரசுகள் இணைந்து தயார்படுத்தி வருகின்றன. 4 லட்சத்து 61 ஆயிரத்து 589 ஹெக்டேர் நிலம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பன்னாட்டு நிறுவனங்கள்
இதில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 15 ஆயிரத்து 131 ஹெக்டேர் நிலமானது குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திராவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு ஏற்கனவே பல பன்னாட்டு நிறுவனங்கள் இருப்பதால் இங்கு எளிதில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெற முடியும் என்பதால் இங்கு முக்கியத்துவம் அதிகம் உள்ளது. இதனால் இந்தமாநில அரசுகளும் சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை வளைத்துப் போடும் முயற்சிகளில் குதித்துள்ளன.
திருப்பூர், ஈரோடு
தமிழக அரசு இதுதொடர்பாக ஏற்கனவே குழுவை அமைத்து வேலைகளையும் முடுக்கி விட்டுள்ளது நினைவிருக்கலாம். தமிழகத்தில் தொழில் வளம் ஏற்கனவே சிறப்பாக உள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு மிக்க நகரங்களும் நிறையவே உள்ளன. சென்னையைத் தவிர்த்து கோவை, திருப்பூர், ஈரோடு என பல நகரங்கள் தொழில் வசதியில் ஏற்கனவே முன்னோடிகளாக உள்ளன.
முதலீடு
இந்தியாவை பொறுத்தவரை அடிப்படடையிலேயே வலுவான உள்கட்டமைப்பை கொண்டது.. இங்கு முதலீடு செய்ய ஏகப்பட்ட பேர் விரும்புகிறார்கள்.. இதெல்லாம் நமது பொருளாதாரத்தை உயர்த்த உதவும் என்றாலும் கூட எப்போதுமே இதுபோன்ற நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கும்போது பெரும்பாலும் விவசாய நிலங்களே கையகப்படுத்துவது வழக்கமாக உள்ளது. டாடா நானோ ஆலைக்காக மேற்கு வங்கத்தில் விவசாய நிலம் ஒதுக்கப்பட்டபோது மிகப் பெரிய போராட்டம் வெடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
மண்வளம்
தரிசு நிலமாக இருந்தால் கொடுப்பதில் தவறில்லை. அதேசமயம், மண்வளம் மிக்க விவசாய நிலங்களை பாழ்படுத்தி விடக் கூடாது. அப்படி செய்தால் விவசாயிகள் அழிவார்கள்.. விவசாயம் அழியும். அது நமது நாட்டுக்கு பேராபத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.. ஒரு மிகப்பெரிய நெருக்கடியை நாம் சந்தித்து கொண்டுள்ளோம்.. உலக நாடுகளில் இல்லாத ஒரு சொத்து நமக்கு இருக்கிறதென்றால் அது மண் வளம்தான்.. விவசாயம்தான்.. அதையும் பறிகொடுத்துவிட்டால் சீமான் சொல்வது போல, வெங்காயம், தக்காளி எல்லாம் இம்போர்ட் என்ற விபரீதம் தான் ஏற்பட்டுவிடும்.
முதுகெலும்பு
இந்த கொரோனா சமயத்தில் நமக்குக் கை கொடுத்தது காசோ, பணமோ, நாம் சேர்த்து வைத்த சொத்துக்களோ அல்லது வேறு எதுவுமோ அல்ல.. சோறுதான்... அந்த சோறைக் கொடுத்தது நம் விவசாயம்தான். விவசாயம் இருப்பதால் தன் நாம் உயிர் பிழைக்க முடிகிறது. அந்த விவசாயத்தை நாம் கட்டிக் காத்தாக வேண்டும்... நாட்டின் பொருளாதாரத்தை காக்க வேண்டிய அதிமுக்கிய தேவை அரசுக்கு இருந்தாலும், விவசாயிகளை சோர்ந்து போகாமல் காக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது... எந்த காரணம் கொண்டும் இந்தியாவின் முதுகெலும்பை வளைத்து விட கூடாது என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பும்!!