தாத்தா இலங்கையில் பணக்காரர்; மாமா எம்பி! ஆ.ராசா உடைத்த குடும்ப ரகசியம்
சென்னை: தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனபோது ஏற்பட்ட மனநிலை என்ன? அந்தச் சம்பவம் தனக்குள் ஏற்படுத்திய காயம் என்ன என்பதைப் பற்றி ஆ.ராசா பேசி இருக்கிறார்.
திமுக எம்பி ஆ.ராசா 2ஜி வழக்கை யாரும் எளிதாக மறந்துவிட முடியாது. இந்திய அரசியலை தாண்டி உலக அளவில் திமுக மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய வழக்கு. அதன்பின்னர் சட்டரீதியாக வாதாடி ஆ.ராசா வெளியே வந்தார். அதை அவர் தனி புத்தகமாகக் கூட எழுதி இருக்கிறார். பலருக்கும் 2ஜி ராசாவைப் பற்றித்தான் தெரியும். அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி அதிகம் தெரியாது. அவரது மனைவி புற்றுநோய் பாதித்து சில ஆண்டுகள் முன்பு இறந்து போனார். அந்தத் துயரம் பற்றி கூட அதிகம் வெளியே அவர் பேசியதில்லை.

இப்போது தனது குடும்பம், மகள், வழக்கு எனப் பல விசயங்களை அவர் பேசி இருக்கிறார். ஒரு யூடியூப் தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் உணர்ச்சிகரமாக உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். "வீட்டில் என்னை ராஜா என்றுதான் கூப்பிடுவார்கள். என்னை கலைஞர் கூட ராஜா என்றுதான் அழைப்பார். எனக்குச் சின்ன வயதிலிருந்தே தமிழ்ப் பற்று அதிகம். ஆகவே ராசா என்றுதான் கையெழுத்துப் போடுவேன். அதுவே அரசியலிலும் நிலைத்துவிட்டது" என்கிறார்.
தொடர்ந்து ஆ.ராசா பேசுகையில், "எங்கள் குடும்பத்தில் நான் தான் 8வது பையன். 4 அக்காக்கள் இருக்கிறார்கள். மூன்று அண்ணன்கள் இருக்கிறார்கள். நான் தான் கடைசி பையன். 1910 இல் என் தாத்தா வறுமையிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகக் கள்ளத்தோணியில் இலங்கைக்குப் போனார். அங்கே வெள்ளைக்கார அதிகாரியிடம் வேலை பார்த்தார். அவரிடம் நல்ல பெயர் எடுத்துச் சம்பாதித்தார். 10 பசு மாடுகளை வாங்கி வளர்த்தார்.
அடுத்து ஜவுளிக்கடை வைத்தார். இவரே அதி டெய்லராக இருந்தார். தாத்தாவின் தம்பியும் டெய்லர். இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இவர்கள் இருவர்தான் தையல்காரர்கள். இவ்வளவு தூரம் தாத்தா வளர ஒரு இஸ்லாமியர்தான் அவருக்கு உதவி செய்தார்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் என் அப்பா இலங்கையில் பிறந்தவர்தான். என்னுடன் பிறந்த 7 பேரும் இலங்கையில் பிறந்தவர்கள்தான். நான் மட்டும்தான் இந்தியாவில் பிறந்தவன். 1957 என் அம்மாவின் அண்ணன் தமிழ்நாட்டில் எம்பி இருந்தார். ஆகவே, அவரது உதவியால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் நன்றாகப் படித்தார்கள். என் அப்பா நன்றாக ஆங்கிலம் பேசுவார், எழுதுவார்.
அப்பா 1962-இல் தமிழ்நாட்டுக்குத் திரும்பினார். 1964இல் நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். என்னுடன் படித்தவர்கள் அனைவரும் அரசு அதிகாரிகள். அக்கா ஆசிரியை. அண்ணன் ஐஎஃப்எஸ் ஆபீசர். அக்காக்களின் கணவர்கள் நகராட்சி ஆணையர்கள். ஒரு அண்ணன் இன்ஜினியர். ஒரு அண்ணன் படித்துவிட்டு சொந்தமாகப் பள்ளி நடத்துகிறார்.
நான் சட்டம் படித்துவிட்டு மத்திய அமைச்சர் அளவுக்கு உயர்ந்தேன். என் மகள் இப்போது லண்டனில் சட்டம் படிக்கிறாள். 1910 இலங்கைக்கு வறுமைக்காக ஓடிய எங்கள் குடும்பத்தை இந்தளவுக்கு உயர்ந்தியது திராவிட அரசியல்தான். என் மகள் யூகேஜி முதல் டெல்லியில் படித்தவள். அவருக்கு ஜாதி என்றால் என்னவென்று தெரியாது. தாய்மாமன் மகளைத்தான் நான் கல்யாணம் செய்தேன். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். என் மனைவி பக்திமான். அவர் திங்கள்கிழமை என்றால் எனக்காக விரதம் இருப்பார். வியாழக்கிழமை பாபாவுக்காக விரதம் இருப்பார். சனிக்கிழமை ராமருக்காகச் சாப்பிட மாட்டார்.
அவருக்குப் புற்றுநோய் வந்தது. நான் கிராமத்தில் படித்தவன். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தெரியாமல் கலங்கினேன். என் மகள் டெல்லியில் படித்தவள். அவருக்கு இந்த நோய் வந்தால் இந்த விளைவு என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்தான் என்னைத் தேற்றினார். சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால், அதுதான் நடந்தது. என் மகள் என்னைவிடத் தைரியசாலி.
நான் திருமணம் ஆன உடனேயே எம்பி ஆகிவிட்டேன். 1996 இல் டெல்லி போனேன். அப்போது முரசொலி மாறன், 'குடும்பத்தை டெல்லிக்கு அழைத்து வந்துவிடு. உனக்கு அரசு குடியிருப்பு தருவார்கள்' என்று சொன்னார். அப்போது மனைவியை அழைத்துப் போனேன். அங்கேதான் என் மகள் பிறந்தாள். அங்கேயேதான் வீடு உள்ளது. எனக்குச் சென்னையிலிருந்தது அலுவலகம் மட்டும்தான். நல்லவேளை மாறன் சொன்னதால் நான் தப்பித்தேன். 2ஜி வழக்கு வரும்போது தினம் விசாரணை நடக்கும். அங்கே இருந்ததால்தான் என்னால் வாதாடி வெற்றி பெற முடிந்தது. எனக்கு ஒன்றரை லட்சம் எம்பி சம்பளம் கிடைத்தது. அதை வைத்து வாதாடி வெளியே வந்துவிட்டேன்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications