ஆக.26ல் சென்னையில் 400 முகாம்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் ஆகஸ்ட் 26ம் தேதி 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 1585 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 27 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34,761 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 2,37,22,353 பேருக்கு ஒரு டோஸ் கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. 56,47,769 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக 2,93,70,122 டோஸ் வேக்சின்கள் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி சராசரியாக 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை வேக்சின் பெறுகிறார்கள்.

முகாம்
இந்த நிலையில் சென்னையில் 400 முகாம்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், தமிழக அரசு கொரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தி வருகிறது.

தடுப்பூசிகள்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

எத்தனை
அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 23.08.2021 வரை 25,72,540 முதல் தவணை தடுப்பூசிகள், 11,07,473 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 36,80,013 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 1,409 நபர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 1,187 முதல் தவணை தடுப்பூசியும், 222 இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள்
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை செயல்படுத்தும் வகையில், 26.08.2021 அன்று மாநகராட்சியின் சார்பில் ஒரு வார்டிற்கு 2 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என மொத்தம் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கோவிட் தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதில் 200 சிறப்பு முகாம்கள் அந்தந்த வார்டில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (அ) சமுதாய நல மருத்துவமனைகள் (அ) மினி கிளினிக்குகள் (அ) வார்டு அலுவலகங்கள் (அ) பகுதி அலுவலகங்கள் (அ) பள்ளிகள் போன்ற ஏதேனும் ஒரு இடத்தில் நடத்தப்பட உள்ளது.

தற்காலிக முகாம்கள்
மேலும், 200 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு வார்டிலும் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் 26.08.2021 அன்று தங்கள் பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் மாநகராட்சியின் http://covid19.chennaicorporation.gov.in/covid/mega_camp, தெரிந்து கொள்ளலாம், என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications