175 பொருட்களின் விலை அடியோடு குறையுது! GST வரியில் அசத்தல் மாற்றம்! மத்திய அரசின் முக்கிய முடிவு
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மத்திய அரசு கிட்டத்தட்ட 175 பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) குறைக்க திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, ஜி.எஸ்.டி-யை குறைந்தது 10 சதவீத புள்ளிகள் குறைக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது 18% உள்ள தனிநபர் பராமரிப்புப் பொருட்களான டால்கம் பவுடர், பற்பசை மற்றும் ஷாம்பூ மீதான ஜி.எஸ்.டி 5% ஆகக் குறைக்கப்படும். இது இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் மற்றும் கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களுக்கு பெரிய ஊக்கமாக அமையும்.
GST வரியில் ஏற்படும் மாற்றங்கள்
ஏ.சி மற்றும் டி.வி போன்ற நுகர்வோர் மின்னணுப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி 28%-ல் இருந்து 18% ஆக குறைக்கப்படும். இதன் மூலம் சாம்சங், எல்.ஜி எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் சோனி போன்ற நிறுவனங்கள் பயனடையும். சிறிய ஹைப்ரிட் கார்களுக்கான ஜி.எஸ்.டி 28%-ல் இருந்து 18% ஆகக் குறைய வாய்ப்புள்ளது. இது மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் மற்றும் டொயோட்டா இந்தியா நிறுவனங்களுக்கு ஒரு பெரிய வெற்றியாக அமையும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் செப்டம்பர் 3-4 தேதிகளில் கூடி இந்த ஜி.எஸ்.டி குறைப்பு குறித்து முடிவெடுக்கும். சிக்கலான ஜி.எஸ்.டி அமைப்பில் இந்த மாற்றங்கள், பிரதமர் மோடி ஆகஸ்ட் 15, 2025 அன்று ஆற்றிய சுதந்திர தின உரையில், தினசரி பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைப்பதாக அறிவித்ததன் எதிரொலியாகும்.
GST ஜீரோ வரி
நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களான UHT பால், முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட பன்னீர், பிட்சா ரொட்டி, காக்கரா, சப்பாத்தி மற்றும் ரொட்டி போன்றவற்றுக்கு இனி GST இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் தனது பூஜ்ஜிய வரி வரம்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் 5% மற்றும் 18% வரிவிதிப்பில் இருந்த அத்தியாவசியப் பொருட்களுக்கு இனி வரி விலக்கு அளிக்கப்படும்.

இதேபோல், முன்பு 18% வரிவிதிக்கப்பட்ட பராட்டா மற்றும் பரோட்டா ஆகியவையும் பூஜ்ஜிய வரி வரம்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. வரி விகிதங்களை சீரமைக்கும் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கல்வி சார்ந்த பொருட்களும் இந்த வரி குறைப்பினால் பெரிதும் பயனடையவுள்ளன.
GST வரி சீரமைப்பு
வரைபடங்கள், ஹைட்ரோகிராஃபிக் விளக்கப்படங்கள், அட்லஸ்கள், சுவர் வரைபடங்கள், உலக உருண்டைகள், அச்சிடப்பட்ட கல்வி விளக்கப்படங்கள், பென்சில் ஷார்ப்பனர்கள், அனைத்து வகையான பென்சில்கள் (கிரேயான்கள், பேஸ்டல்கள், டெய்லர் சாக்பீஸ் மற்றும் வரைதல் கரியன்கள் உட்பட), அத்துடன் பயிற்சிக் குறிப்பேடுகள், வரைபடக் குறிப்பேடுகள் மற்றும் ஆய்வகக் குறிப்பேடுகள் ஆகியவற்றுக்கு முன்பு 12% வரி விதிக்கப்பட்டது.
இப்போது இவை அனைத்தும் வரி விலக்கு பெற்றுள்ளன. இது மறைமுக வரி அமைப்பை சீரமைத்து, வரி அடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, வகைப்பாட்டு சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான அரசின் பரந்த முயற்சியை பிரதிபலிக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். பூஜ்ஜிய வரி விகிதத்தை விரிவுபடுத்துவது குடும்பங்களுக்கும், மாணவர்களுக்கும் குறிப்பிடத்தக்க நிவாரணம் அளிக்கும். மேலும், வரி அமைப்பை எளிமையாகவும், வெளிப்படையாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இறுதி முடிவு, அடுத்த வாரம் டெல்லியில் நடைபெறவுள்ள 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.
அதேபோல் ஜிஎஸ்டி முறையில் கொண்டுவரப்படும் புதிய மாற்றங்கள் இருசக்கர வாகனச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக பல இருசக்கர வாகனங்களுக்கான விலை கடுமையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய ரக இருசக்கர வாகனங்களுக்கான வரி 18% ஆக குறைக்கப்படும் நிலையில், பெரிய ரக பைக்குகளுக்கு 40% வரி விதிக்கப்படவுள்ளது.
350 சிசி வரையிலான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி தற்போதுள்ள 28% இலிருந்து 18% ஆக குறைக்கப்படும். இதனால் இந்த வகை வாகனங்களின் விலை குறையும். இருப்பினும், 350 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட பைக்குகளுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்பதால், அவற்றின் விலை அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications