ஜிஎஸ்டி வைத்த ட்விஸ்ட்? இனி தங்கம் விலை எக்குத்தப்பாக உயரும்.. புதிய குண்டை போட்ட ஆனந்த் சீனிவாசன்
சென்னை: பிரதமர் மோடி கடந்த வாரம் தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி வரி தொடர்பாக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். இதனால் பல பொருட்களின் விலைவாசி குறையும் என மக்கள் சந்தோஷத்தில் இருந்தனர். இதற்கிடையே இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் தங்கம், வெள்ளி விலை உயர வாய்ப்பு அதிகம் எனச் சொல்லி, ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார்.
கடந்த வாரம் பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பல முக்கிய கருத்துகளைக் கூறியிருந்தார். குறிப்பாக நாட்டில் ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் பல பொருட்களின் வரி குறையும் என்றும் அவர் சொல்லியிருந்தார்.

ஆனந்த் சீனிவாசன்
இதனால் பல்வேறு பொருட்களின் விலையும் குறையப் போகிறது என மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், இதில் மறைந்திருக்கும் ஒரு விஷயத்தைப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பால் தங்கம் விலை உயரக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஜிஎஸ்டி கனெக்ஷன்
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "முதலில் நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி வரி குறைப்பு விஷயத்தைப் பிரதமர் மோடியால் முடிவு செய்ய முடியாது. மத்திய அரசால் கூட முடிவு செய்ய முடியாது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடி அதில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒப்புக்கொள்ள வேண்டும். 3ல் 2 பங்கு மாநிலங்கள் ஒப்புக்கொண்டால் போதும் என்றாலும் கடந்த காலங்களில் எல்லா முடிவுகளிலும் அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்தே செய்துள்ளன.
வரியைக் குறைத்தால் எல்லா மாநிலங்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும். அதையும் தாண்டி அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். இவ்வளவும் நடந்தால் மட்டுமே ஜிஎஸ்டி குறைப்பு வரும். எனவே, இதைப் பிரதமரோ அல்லது மத்திய அரசோ அறிவிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை ஜிஎஸ்டி கவுன்சில் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்..
புதிய குண்டை போட்டார்
இப்போது நமது நாட்டில் பல பிரிவுகளில் ஜிஎஸ்டி இருக்கிறது. 0%, 5%, 12%, 18% 28% ஆகியவை தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதையும் தாண்டி சில ஜிஎஸ்டி அடுக்குகள் உள்ளன. உதாரணத்திற்குத் தங்கத்தைச் சொல்லலாம். தங்கத்திற்கு இப்போது 3% வரி விதிக்கப்படும் நிலையில், அது 5%ஆக உயரலாம். ஏனென்றால் வரியை எளிமைப்படுத்தி இரண்டு அடுக்குகள் மட்டும் இருக்கும் எனச் சொல்லியிருக்கிறார். அப்படிப் பார்த்தால் 12%ல் இருக்கும் பொருட்கள் 5%க்கு வரும். 3%ல் இருக்கும் தங்கம் கூட 5%க்கு வரலாம்.
தங்கம் விலை உயரும்
இதன் மூலம் யாருக்கெல்லாம் தங்கம் இருக்கிறதோ.. அவர்களுக்கு 2% போனஸ் எனச் சொல்லலாம். அதாவது பணக்காரர்களுக்கு லாபம். பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் இனிமேல் 2 வரி அடுக்குள் மட்டுமே இருக்கும் எனச் சொன்னார். தங்கத்திற்கு இருக்கும் 3% வரி தொடரும் என அவர் எதையும் சொல்லவில்லை. எனவே, 5% அடுக்கில் தங்கம் வர வாய்ப்பு அதிகம். இது பணக்காரர்களுக்கு ஒரு பரிசு போல எனச் சொல்லலாம். எனவே தங்கம் மற்றும் வெள்ளி விலை உயரும்" என்றார்.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் எல்லாப் பொருட்களின் விலையும் குறையும் என மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்தச் சூழலில் தான் மற்ற பொருட்கள் விலை குறையும் என்றாலும் கூட தங்கத்திற்கான வரி உயர வாய்ப்பிருப்பதாகச் சொல்லி அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் ஆனந்த் சீனிவாசன்!
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications