பரபரப்பா "வீடியோ" போட்டாரே.. டாக்டர் தணிகாச்சலம்.. வெளியே வரப் போகிறார்.. குண்டாஸ் ரத்து!
சித்த மருத்துவர் தணிகாசலம் மீதான குண்டர் சட்டமும் ரத்தாகி உள்ளது
சென்னை: வாய் நிறைய வசனம் பேசினாரே டாக்டர் தணிகாசலம், ஞாபகமிருக்கா? அவர் இப்போது வெளியே வர உள்ளார்... எல்லா வழக்குகளில் இருந்தும் ஏற்கனவே அவர் ஜாமீன் பெற்றுவிட்ட நிலையில், மிச்சமிருந்த குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விரைவில் ஜெயிலில் இருந்து டாக்டர் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தமிழகத்தில் வேகமாக பரவிய காலகட்டத்தில்.. பீதியும் கலக்கமும் நிறைந்து மக்கள் விழித்து கொண்டிருந்த நேரத்தில்.. தொற்று குறித்து யூடியூப்பில் வீடியோக்களாக பதிவிட்டவர் சித்த மருத்துவர் தணிகாசலம்.
தொற்றை தடுக்க மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், ஆனால், அதனை தமிழக அரசு புறக்கணிப்பதாகவும் குறை சொல்லி, முதலமைச்சருக்கு எதிராக வீடியோவை வெளியிட்டிருந்தார்.

போலீசார்
இதையடுத்துதான், எதிராக வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்த நிலையில் பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் ஜெயிலில் அடைக்க உத்தரவிடப்பட்டது. பின்னர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தணிகாச்சலத்தின் அப்பா, கலியபெருமாள் சென்னை ஹைகோர்ட்டில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

விசாரணை
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, நம் நாட்டில் சித்த மருத்துவத்தை ஊக்குவிக்காதது ஏன் என்று, மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பி இருந்தனர்.

அறிவுறுத்தல்
மேலும், மற்ற மருத்துவ முறைகளை போலவே இந்திய மருத்துவ முறையையும் சமமாக ஊக்குவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தனர்.. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

குண்டர் சட்டம்
தணிகாச்சலம் ஏற்கனவே எல்லா வழக்குகளிலும் ஜாமீன் பெற்றுவிட்ட நிலையில் தற்போது அவர் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விரைவில் ஜெயிலில் இருந்து அவர் வெளியே வருவார் என கூறப்படுகிறது.. உண்மையிலேயே, கொரோனாவுக்கு இவர் மருந்து கண்டுபிடித்து விட்டாரா என தெரியாத சூழலில், இனியாவது அது குறித்து இவர் வெளிப்படையாக தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications