வெயிட் குறைக்கலாம்னு போன பெண்ணிடம்.. சென்னை ஜிம் மாஸ்டர் செய்த அசிங்க வேலை
சென்னை: உடல் எடையைக் குறைக்க வந்த பெண்ணை ஆபாச படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய ஜிம் மாஸ்டரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்கள் ஒரு பக்கம் வளர்ச்சியைக் காட்டினாலும், மறுபக்கம் பல சமூக விரோத செயல்களுக்கும் வழிவகுத்து வருகின்றன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் நட்பாக பழகுவோரை நம்பி பலரும் தங்களது சுய விவரங்கள், அந்தரங்கப் புகைப்படங்களை பகிர்வதால் பல்வேறு சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் சில சமயங்களில் உயிரிழப்பு சம்பவங்கள், பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், சென்னை, கீழ்பாக்கம் ஹார்லே சாலையில் பிரபல ஜிம் நிறுவனத்தில் உடல் எடையைக் குறைக்க வந்த பெண்ணிடம் பழகிய ஜிம் மாஸ்டர் அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிம் பயிற்சியாளர் சூர்யாவை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை, கீழ்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் உள்ளது பிரபல ஜிம் நிறுவனம். இந்த உடற்பயிற்சிக் கூடத்துக்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக சென்றுள்ளார். செளகார்பேட்டையைச் சேர்ந்த சூர்யா என்பவர் அங்கு ஜிம் பயிற்சியாளராக இருந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு சூர்யா பயிற்சி கொடுத்து வந்துள்ளார். நாளடைவில் இவர்கள் இருவரும் நண்பர்களாக மாறியுள்ளனர்.
ஒருகட்டத்தில் சூர்யாவின் நடவடிக்கை பிடிக்காத காரணத்தால் அந்த நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் சூர்யாவை வேலையை விட்டு பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவின் நடவடிக்கை பிடிக்காத அந்த இளம்பெண்ணும் அவரிடம் பேசுவதை அடியோடு நிறுத்தியுள்ளார். ஒரு பக்கம் வேலையும் இல்லை, மறுபக்கம் இந்த பெண்ணும் பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த சூர்யா கடந்த 13 ஆம் தேதி ஜிம்மிற்குச் சென்று அவரை கீழே வருமாறு அழைத்துள்ளார்.
அப்போது, சூர்யா அந்த பெண்ணை கீழே அழைத்துச் சென்று ஆபாசமாக பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. நீ என்னிடம் எப்போதும் போல பேச வேண்டும். இல்லை எனில் நீ என்னுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். மேலும், பெண்ணின் குடும்பத்தில் கூறிவிடுவேன் என்று கூறி சூர்யா மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இச்சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் சூர்யாவின் மீது புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, புகாரின்பேரில் காவல் துறையினர் சூர்யா மீது பெண் வன்கொடுமை உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உடல் எடையைக் குறைக்க வந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக ஜிம் மாஸ்டர் மிரட்டியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications