பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஶ்ரீராமரின் கோஷம் எரியும்-'தீப்பொறி' திருமுகமாக பாஜக எச்.ராஜா ட்வீட்
சென்னை: "ஜெய் ஶ்ரீராம்" கோஷம் ஆட்சேபகரமானதல்ல என பாஜகவின் மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அகமதாபாத்தை அதிரவைத்த ஜெய்ஶ்ரீராம்: அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது, ஜெய் ஶ்ரீராம் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் இந்த ஜெய் ஶ்ரீராம் முழக்கத்துக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால் நாடு முழுவதும் ஜெய் ஶ்ரீராம் முழக்கம் குறித்து விமர்சனங்கள், விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு பாஜக பதிலடி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெய் ஶ்ரீராம் என்பது ஒரு முழக்கம். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் எனில் தர்மத்தை சனாதன தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும். அதை விமர்சிக்க கூடாது என்றார். இதேபோல பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் ஜெய் ஶ்ரீராம் கோஷம் என்பது உரிமை. அதை தடுக்க யாருக்கும் உரிமையும் தகுதியும் இல்லை என்றார். மேலும் திருப்பூரில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த எல்.முருகன், 10 முறை ஜெய் ஶ்ரீராம் என்று மட்டும் உச்சரித்தார்.

எச்.ராஜாவின் ஆவேசம்: இதேபோல மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பாரதநாட்டின் அரசயலமைப்பு சட்ட கையெழுத்து வடிவின் முதல் பக்கத்தில் எம்பெருமான் "ஶ்ரீராமரின் " படம் உள்ளது. இன்றும் பாராளுமன்றத்தில் பார்வைக்காக உள்ளது. ஆகவே "ஜெய் ஶ்ரீராம்" கோஷம் ஆட்சேபகரமானதல்ல. மரியாதா புருஷோத்தமன் ஶ்ரீராமர் நம்நாட்டின் கலாச்சாரத்தின் அடையாளம். பல மனைவிகளோடு வாழும் கும்பலுக்கு ஶ்ரீராமரின் கோஷம் எரியத்தானே செய்யும்? இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை: கடந்த சில நாட்களுக்கு முன்னர் எச்.ராஜா உடல்நலன் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது எக்ஸ் பக்கத்தில் Team HR என்ற பெயரில் பதிவிடப்பட்டிருந்தது. இதன் பின்னர், இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை துவம்சம் செய்த பாரத அணிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் எனவும் பதிவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications