திமுக எம்.பி. ஆ.ராசாவின் தனி தமிழ்நாடு பேச்சு... முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிக்காவிட்டால்... ஹெச்.ராஜா
சென்னை: திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா எம்.பி, தனி தமிழ்நாடு குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகி வருகிறது. ஆ.ராசாவின் இந்த பேச்சை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாடு ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா பேசியதாவது: தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. தந்தை பெரியார் சாகும்வரை தனித் தமிழ்நாடு கேட்டார் . பெரியார் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கூட இன்றைக்கு திமுக ஆட்சியிலே இருக்கிறது. அவர்கள் மாநில சுயாட்சி என்று தங்களை சுருக்கிக் கொண்டார்கள். ஆனால் இளைஞர்களே சுதந்திர தமிழ்நாடு கேளுங்கள் என்றார்.
காவித் துண்டு போட்டவரை தொட்டுப்பார்... திமுகவுக்கு ஹெச்.ராஜா சவால்!
தனிநாடு நோக்கி
மேலும் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக தந்தையையே ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா வாழ்க என்று சொன்னோம். நான் பிரதமருக்கு அமித் ஷாவுக்கு மெத்தப் பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அண்ணா வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம் என்றும் ஆ.ராசா பேசினார்.
ஹெச்.ராஜா ட்வீட்
ஆ.ராசாவின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தேசிய ஊடகங்களும் இது தொடர்பாக விவாதங்களை நடத்தின. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆ.ராசாவின் பேச்சை உடனடியாக கண்டிக்க வேண்டும் இல்லையேல் ஆ.ராசாவின் பேச்சு தமிழக அரசின் நிலைப்பாடாக கருதப்படும் என கூறியுள்ளார்.
பெரியாரின் தனிநாடு
நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என நாடு விடுதலைக்கு முன்னர் மாற்றப்பட்டது. அப்போது திராவிடர் கழகத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது சென்னை மாகாணமாக இருந்த அன்றைய தமிழகத்தை தனிநாடாகப் பிரிக்க வேண்டும் என்பதுதான். அதற்கு முன்னதாக இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்ட களத்திலும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தவர் தந்தை பெரியார். திராவிடர் கழகத்தின் சார்பாக, தனிநாடு கோரிக்கைக்கான ஒரு ராணுவ கட்டமைப்பாக கருஞ்சட்டைப் படை உருவாக்கப்பட்டது. ஆனால் அதற்கு தடை விதிக்கப்பட்டதால் அந்த அமைப்பு உருவாக்கப்படவில்லை.
அண்ணாவின் திராவிடநாடு
பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்து திமுகவை உருவாக்கினார். திமுகவும் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தது. அதாவது நிலப்பரப்பு அடிப்படையில் திராவிடர்கள் வாழும் தென்னக மாநிலங்களின் கூட்டமைப்பான திராவிட நாடு கோரிக்கையை திமுக முன்வைத்தது. பின்னர் அது மாநில சுயாட்சியாக உருமாறியது. இந்த வரலாறைத்தான் ஆ.ராசா சுட்டிக்காட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.