ஹத்ராஸ் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட துயரம்.. ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்பட தலைவர்கள் இரங்கல்
சென்னை: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே உள்ள முகல்கர்ஹி கிராமத்தில் போலே பாபாவின் (Bole Baba) நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்ததால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். லோக்சபா எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற இடத்தில் சத்சங்கத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராத்திகிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இந்த கடினமான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறேன்" என்று கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான நெரிசலில் விலைமதிப்பற்ற உயிர்களின் சோகமான இழப்புகளால் ஆழ்ந்த வேதனையில் ஆழ்ந்துள்ளேன். இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஆன்மீக சத்சங்க நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலம் பெற வேண்டும் வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த அனைவருக்கும் இரங்கலையும், அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிகழ்வில் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் ஒன்றிய அரசும் உத்திர பிரதேச அரசும் கைவிடாமல் உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications