ஜெயக்குமார் வீட்டில் நண்டு விட்டாரே.. நர்மதா.. பாஜக தலைவர் முருகன் வீட்டருகே என்ன பண்ணாரு பாருங்க
சென்னை: சென்னை கோயம்பேடில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் வீடு அருகே பா.ஜ.க. கொடியை தூக்கிலிடும் போராட்டத்தில் ஈடுபட்ட நர்மதா நந்தகுமார் எனும் பெண்மணியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
சென்னை, மேற்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நர்மதா. இவர் அவ்வப்போது நூதன போராட்டங்களில் ஈடுபடுவர். சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டினம்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்.
இன்று கோயம்பேடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உள்ள பாஜக தலைவர் எல். முருகன் வீட்டின் முன்பு பா.ஜ.க. கொடியை தூக்கிலிடும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பரபரப்பு
விஷயத்தை கேள்விப்பட்டு பாஜக தொண்டர்கள் குவிந்ததால் அங்கு பதற்றம் தொற்றியது. இதையடுத்து, காவல்துறையினர் நர்மதாவை கைது செய்து எம்.ஜி.ஆர். பேருந்து நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ரவுடிகள் ஆதரவு
எதற்காக இவ்வாறு ஒரு போராட்டம் நடத்துகிறீர்கள் என்று கேட்டபோது, பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் ரவுடிசத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய அவர், அதன் காரணமாகவே போராட்டம் நடத்தியதாக கூறினார்.

விமர்சனங்கள்
பாஜகவில் சமீபகாலமாக ரவுடி பட்டியலில் இருந்த பலரும் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இதை பிற கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில்தான், நண்டு விட்டு ஃபேமஸான நர்மதா பாஜக கொடியை தூக்கிலிடும் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஜெயக்குமார் வீட்டில் நண்டு
மீனவர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு இல்லை என்றும், கடல் அரிப்பால் மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், எனவே மீனவர்களுக்கு பாதுகாப்பான வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இவ்வாறு ஒரு போராட்டத்தை நர்மதா நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேரவையில் பேசிய ஜெயக்குமார், காட்டில் சிங்கம், புலியை பார்த்த தனக்கு நண்டை பார்த்து பயமில்லை என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications