விவசாயிகளுக்கு குஷி.. சம்பா சிறப்பு தொகுப்பு திட்டம் வரப்போகிறது.. எப்ப தெரியுமா? தமிழக அரசு கலக்குதே
சென்னை: விவசாயிகளின் நன்மையை கருத்தில் கொண்டு பல்வேறு அதிரடிகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும்நிலையில், இன்னொரு முக்கிய அறிவிப்பையும் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மேட்டூர் அணை நீரை திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு, மேட்டூர் அணை நீர் திறந்துவிடப்பட்டது..

விவசாயிகள் : அணையிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்ட விவசாயிகள் பெருத்த மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து, விவசாயிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, கொண்டாட்டத்தில் கொண்டார்கள்.
அணை திறக்கப்பட்டதற்கு, ஏராளமான விவசாய சங்கங்களும் வரவேற்று, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்ததுடன், சில கோரிக்கைகளையும் அரசுக்கு அப்போது விடுத்திருந்தனர்.
டெல்டா: குறிப்பாக, டெல்டாவில் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தற்போது ஒரே நேரத்தில் மேற்கொள்ள உள்ளதால், சம்பா சாகுபடிக்கு தேவையான விதைநெல், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும்.. ஆறுகளிலிருந்து அந்தந்த பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்..
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரி, குளம், குட்டைகள் மற்றும் நீராதாரங்களில் தண்ணீரை நிரப்ப வேண்டும் என்றும் சம்பாசாகுபடிக்கு தேவையான விதைநெல் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்..
சம்பா சாகுபடி: இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் ஒரு முக்கிய கோரிக்கை டெல்டா விவசாயிகள் தரப்பிலிருந்து வெளியாகியிருக்கிறது.. டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை, குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை, 78.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதற்கு சம்பா சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வேளாண் துறை செயலர் அபூர்வா, இயக்குனர் முருகேஷ் ஆகியோர், தங்களது இந்த கோரிக்கையை அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.. இதையடுத்து, சம்பா சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க, தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.. மேலும், குறுவை சாகுபடி காலம் இன்னும் முடியாததால், அநேகமாக இந்த மாத இறுதியில் அறிவிக்கவும், அரசு திட்டமிடப்பட்டுள்ளதாம்.
மகிழ்ச்சி: முன்கூட்டியே சம்பா சாகுபடி துவங்கினால், வடகிழக்கு பருவ மழையில் பயிர்கள் பாதிக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என்றாலும், தமிழக அரசு முன்னெடுக்கப்போகும் இந்த நடவடிக்கையானது விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications