மாணவர்களுக்கு ஹேப்பி.. இனி அரசு ஹாஸ்டல் கிச்சன்களுக்கும் லைசென்ஸ் அவசியம்! உணவு பாதுகாப்பு உரிமம் அதிரடி
சென்னை: பொது மக்களின் ஆரோக்கியம் மற்றும் உணவுத் தரத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கான தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறது.. தள்ளுவண்டி வைத்திருப்பவர்கள் FSSAI சான்றிதழ் கட்டாயம் என்று கடந்த வாரம் உத்தரவிட்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு புதிய உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாகவே, ஓட்டல்களிலும், இறைச்சி கடைகளிலும் தரமற்ற இறைச்சியை விநியோகிக்கப்பதாக புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.. இதையடுத்து அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று நேரடியாகவே ஆய்வு செய்து வருகிறார்கள். அத்துடன் தரமற்ற உணவு பொருட்களை விற்போருக்கு அபராதங்களையும் தந்து வருகிறார்கள்..

உணவு பாதுகாப்பு
பொதுவாக, இந்தியாவிலுள்ள அனைத்து உணவு வணிகர்களும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் பெற்றிருப்பது கட்டாயமாகும்..
உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில், சுகாதாரம், தரத்தை உறுதி செய்யவும், சுகாதாரமற்ற மற்றும் கலப்படமில்லா உணவு விற்பனையை தடுக்கவும், இந்த முறை அமலில் உள்ளது. பெட்டிக்கடை, தள்ளுவண்டி கடை உள்ளிட்ட அனைத்து வியாபாரிகளும் பதிவு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
லைசென்ஸ் கட்டாயம்
ஒருவேளை லைசென்ஸ் இல்லாமல் அல்லது காலாவதியான லைசென்ஸூடன், உணவு வணிகம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.. இதற்கு 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை அபராதமும் உண்டு.. இதில் ஏதாவது உயிரிழப்புகள் ஏற்பட்டுவிட்டால், அதுதொடர்பான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
கடந்தவாரம்கூட, தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்திருந்தது..
FSSAI உரிமம் இல்லாத கடைகள்
FSSAI உரிமம் இல்லாத கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்த உணவுத்துறை, பானிபூரி, வடை, சூப், சிக்கன் பக்கோடா உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் முறையாக உரிமம் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது.
அதுமட்டுமல்ல, ஆன்லைன், இ-சேவை மையங்களில் இலவசமாக உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை விற்பனையாளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும், தள்ளுவண்டிக் கடை விற்பனையாளர்கள் உரிமம் பெற்றுள்ளார்களா என்பதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய உத்தரவில் கடந்த வாரம் கூறியிருந்தது.
அரசு விடுதிகள் - லைசென்ஸ்
இந்நிலையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் விடுதிகளில் உள்ள சமையல் கூடங்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக உணவு பாதுகாப்பு துறை தெரிவித்து உள்ளது.
காரணம், சில விடுதிகளில் கிச்சனில் சமைக்கப்படும் உணவை சாப்பிட்டு பல மாணவர்களுக்கு ஒவ்வாமை உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் வந்துவிடுகின்றன.. இதுபோன்ற சம்பவம் எதுவும் இனி நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே, உணவு விதிகளில் உள்ள சமையல் கூடங்களை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட அலுவலர்களுக்கு தற்போது அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம்.
சமையல் கூடங்கள்
அதிகாரிகள் நேரடி ஆய்வை மேற்கொள்ளும்போது, அங்கு பதிவு உரிமம் பெறாத சமையல் கூடங்கள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
பொது மக்களின் ஆரோக்கியம் மற்றும் உணவுத் தரத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அரசு விடுதி சமையல் கூடங்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது மாணவர்கள், பெற்றோர்களின் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications