நாமக்கல் ஹேப்பி.. கோழிக்கறி வாங்க கடைக்கு போன "பார்ட்டி".. அங்கே பார்த்தால்.. கறிக்கடையில் உற்சாகம்
சென்னை: தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வரும்நிலையில், நாமக்கல், பல்லடம் கறிக்கடைக்காரர்கள் படுகுஷியில் உள்ளனர்.. என்ன காரணம்?
கோழிக்கறியை பொறுத்தவரை, பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும் 40 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி நடந்து வருகிறது.

இந்த மாவட்டத்திலிருந்துதான், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு கறிக்கோழிகள் பெரும்பாலும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது..
பல்லடம் : அதேபோல, பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.. கறிக்கோழி நுகர்வு அதிகரிக்கும்போது, அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும்போது, விலை குறைவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
கறிக்கோழியை போலவே, நாமக்கல் முட்டைகளுக்கும் பெரும் கிராக்கி உள்ளது.. இதற்கு காரணம், நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன.. கிட்டத்தட்ட 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதிலிருந்து தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கும், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி போக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது..
தேர்தல்: இப்படிப்பட்ட சூழலில், 19-ந்தேதி தேர்தல் நடக்க போகிறது. எனவே, தமிழகம் முழுவதும் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வரும்நிலையில், வாக்குகளை சேகரிக்க, அரசியல் கட்சி தலைவர்களும் அந்த தொகுதிகளில் முகாமிட்டு, ஓட்டு கேட்டு வருகிறார்கள்.. இவர்களுடன் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், தோழமை கட்சி நிர்வாகிகள் என திரண்டு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
எனவே, வாக்கு சேகரிக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு, கட்சி பொறுப்பாளர்கள், களத்தில் இறங்கி உற்சாகத்துடன் வேலைப்பார்க்க வேண்டும் என்பதற்காகவே, அவர்களுக்கு அசைவ சாப்பாடு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இதற்காக, சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, சிக்கன் 65, போன்றவைகள் தினமும் ஒவ்வொரு தொகுதியிலும் சுடச்சுட தயாராகிறது.
விலை மாற்றம்: இதன் காரணமாக கறிக்கோழி பண்ணைக்கொள்முதல் விலையும் உயர துவங்கிவிட்டதாம்.. அதாவது, கடந்த 24 -ந்தேதி ரூ.111 ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி, பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) 27-ந்தேதி ரூ.120, 28-ந்தேதி ரூ.125, 29-ந் தேதி ரூ.130 ஆக உள்ளது. இந்த 5 நாட்களில் மட்டும் கிலோவிற்கு ரூ.19 அதிகரித்து உள்ளதால் உற்பத்தியாளர்கள் படுகுஷியில் காணப்படுகிறார்கள்..
உற்சாகம்: கறிக்கடைகளில் கடந்த வாரம் ஒரு கிலோ கறிக்கோழி ரூ.210 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்பட்டது. இப்போது, கிலோ ரூ.260 முதல் ரூ.270 வரை விற்பனை செய்யப்படுகிறதாம்..
ஒரு சில கடைகளில் விலையில் மாறுபாடு இருக்கிறதென்றாலும், தேர்தல் காரணமாக கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, இல்லத்தரசிகளையும்,அசைப்பிரியர்களையும் கவலையில் ஆழ்த்தி வருகிறது..!!












Click it and Unblock the Notifications