வண்டலூருக்கு விசேஷம்.. 1 வாரத்தில் 80,000 பேர்? அசத்திய சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இந்த பொங்கல் வாரத்தில் 80,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்ததாக பூங்கா நிர்வாகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. பார்வையாளர்கள் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் பெற ஊக்குவிக்கப்பட்டதாகவும் பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்காவுக்கு தினசரி 2500 முதல் 3000 பேர் வரை பார்வையாளர்களாக வந்து செல்கிறார்கள்... விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 10 ஆயிரம் பேர்கூட வந்து செல்கிறார்கள்.

தியேட்டர்: எனவே, சுற்றுலா பயணிகளின் மகிழ்ச்சிக்காகவும், அவர்களின் வருகையை அதிகரிக்கவும், தொழில்நுட்ப தியேட்டர் ஒன்று கட்டப்பட்டுள்ளது.. பூங்காவிற்கு வருவோர், விலங்குகளை நேரடியாக கண்டு ரசிப்பதுடன், அவை தொடர்பான திரைப்படங்களை நவீன தொழில் நுட்பத்தில் பார்த்து ரசிக்கும் வகையில், இந்த 7டி தியேட்டர் கட்டப்பட்டுள்ளது.. மொத்தம் 4 கோடி ரூபாய் செலவில், 32 இருக்கைகளுடன் இந்த தியேட்டர் கட்டப்பட்டுள்ளது.
இந்த தியேட்டரை அமைச்சர் பொன்முடி கடந்த மாதம்தான் திறந்து வைத்தார்.. ஏற்கனவே பல்வேறு வசதிகள் பூங்காவில் உள்ள நிலையில், இந்த தியேட்டரும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் வருகை மேலும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பொங்கல் பண்டிகை: இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் உள்பட 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்..
அதில், "பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. இந்த பொங்கல் வாரத்தில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் உள்பட 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.
- பார்வையாளர்கள் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் பெற ஊக்குவிக்கப்பட்டனர். மேலும், இலவச வை-பை வசதியும் வழங்கப்பட்டது. கூடுதலாக, பண பரிவர்த்தனைகளுக்கு தனி கவுன்டர்கள் இருந்தன. மேலும், தனி டிக்கெட் கவுண்டர்களும் அமைக்கப்பட்டது.
- இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்காக தனி வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டு 8000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பயன்படுத்தப்பட்டது. வாகன நிறுத்துமிடத்திலிருந்து பூங்காவிற்கு பார்வையாளர்கள் வர இலவச பேருந்து வசதி அமைத்து தரப்பட்டது.
- சுமார் 6000-க்கும் மேற்பட்ட 8 வயதுக்குட்பட்ட குழந்தை பார்வையாளர்களுக்கு பெற்றோரின் தொடர்பு எண்ணுடன் கை வளையம் வழங்கப்பட்டது.
- கூடுதலாக 15 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், 24 உயிர் கழிப்பறைகள் மற்றும் ஆவின் பாலக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டன.
- நான்கு இடங்களில் அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் கொண்ட மருத்துவக் குழு மற்றும் உதவி மையங்கள், அமைக்கப்பட்டது. இதை, 5000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பயன்படுத்தினர். ஒரு தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.
- பார்வையாளர்களின் நடமாட்டத்தை கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிசிடிவி(CCTV)அமைப்பு மூலம் கண்காணிக்கப்பட்டு கூட்டத்தை வழிநடத்த சரியான வழிமுறைகள் வழங்கப்பட்டன.
- 90 சீருடை அணிந்த வன ஊழியர்கள், 150 காவல்துறை பணியாளர்கள் மற்றும் 50 என்சிசி(NCC) மாணவர்கள் கூட்டத்தை நிர்வகிப்பதற்கும் பார்வையாளர் உதவிக்காகவும் செயல்பட்டனர்.
- பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்த பூங்காவின் முக்கிய இடங்களில் தகவல் மற்றும் வழிசெலுத்தல் பலகைகள் நிறுவப்பட்டன.
- பூங்காவின் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல தனி வழியும், வெளியேறி பேருந்து நிறுத்தத்தை அடைய தனி வழியும் ஏற்பாடு செய்திருந்தது" என்று தன்னுடைய அறிக்கையில் இயக்குனர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications