அன்புமணிக்கு ஒதுக்கப்பட்டதா மாம்பழம் சின்னம்? மோடி பங்கேற்கும் கூட்டத்தில் போட்டாவை கவனிச்சீங்களா?
சென்னை: செங்கல்பட்டு மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நாளை நடக்கிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் ஏற உள்ள நிலையில், கட்சியில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் மற்றும் சின்னம் படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் அன்புமணி படமும் அவரது கட்சி சின்னமாக மாம்பழம் சின்னமும் வைக்கப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் ஏற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.

என்.டி.ஏ மேடையில் மாம்பழம் சின்னம்
நாளை பிற்பகலில் கூட்டம் நடைபெற இருக்கக் கூடிய நிலையில், இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சின்னம் படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் அன்புமணி படமும் அவரது கட்சி சின்னமாக மாம்பழமும் வைக்கப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்
பாமகவில் தந்தை - மகன் யுத்தம் நடைபெற்று வரும் நிலையில், இருவருமே கட்சிக்கு உரிமை கூறி வருகிறார்கள். அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது நானே தலைவர் என்று ராமதாஸ் கூறி வருகிறார். அதேநேரத்தில் தேர்தல் ஆணையம் தங்கள் தரப்புக்கே மாம்பழம் சின்னம் ஒதுக்கியிருப்பதாக அன்புமணி தரப்பு கூறி வருகிறது.
ஆனால், பாமக கொடி மற்றும் பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி ராமதாஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கட்சிக்கு இருவருமே உரிமை கோரி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தந்தை மகன் மோதல்
மாம்பழம் சின்னம் பேனரில் இடம் பெற்றிருப்பதால் ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அன்புமணி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதால் அப்செட்டாக இருக்கும் ராமதாஸ், திமுக கூட்டணியில் இணையக்கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மாம்பழம் சின்னம் தங்களுக்குதான் சொந்தம் என்றும், பாமக அலுவலகத்தின் தலைமை அலுவலக முகவரியை தவறுதலாக மாற்றி அன்புமணி கொடுத்து இருக்கிறார் என்றும், அதனால்தான் மாம்பழம் சின்னம் அன்புமணி தரப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாம்பழம் சின்னத்தை யார் பயன்படுத்தினாலும் வழக்கு தொடருவோம்.
தேமுதிக, கிருஷ்ணசாமி படம் இல்லை
பிரதமர் மோடியின் மீதே வழக்கு தொடருவோம் என்று ராமதாஸ் தரப்பு கூறி வரும் நிலையில், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் மாம்பழம் சின்னம் இடம் பெற்று இருப்பது ராமதாஸ்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் கிருஷ்ணசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோரின் படம் பொதுக்கூட்ட மேடையில் இடம் பெறவில்லை என்பதால் அவர்கள் கூட்டணியில் இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications