தாம்பரம், ஆவடி, பூந்தல்லி.. வீடு, நிலம் வாங்கி போட்டு இருக்கீங்களா.. இதை உடனே பாருங்க
சென்னை: சென்னை கொடுங்கையூரில் போலி ஆவணம் தயாரித்து 1.75 கோடி மதிப்பு நிலத்தை மோசடி செய்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதேபோல் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரித்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் வீடு, நிலம் வாங்கி போட்டுவிட்டு வெளியூரில் வசிப்பவர்கள் கவனமாக இல்லாவிட்டால் போலீஸ், கோர்ட் என்று அலைய வேண்டிய நிலை ஏற்படும். சென்னையில் நிலத்தின் மதிப்பே கோடியில் போகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளில் சில ஆயிரங்களில் இருந்த நிலத்தின் மதிப்பு, பல லட்சம் என்கிற அளவில் உயர்ந்து இருக்கிறது.

இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களின் நிலங்களை சிலர், போலி வாரிசு சான்றிதழ் மற்றும் போலி ஆவணங்கள் கொடுத்து அபகரிப்பது அடிக்கடி நடக்கிறது. சென்னை, தாம்பரம், ஆவடி என மூன்று காவல் ஆணையர் அலுவலகங்களிலும் அடிக்கடி மோசடி புகார்கள் தரப்படுகின்றன.
சென்னையில் சில நிலங்கள் வில்லங்கத்தில் இருக்கும். குறிப்பாக கூட்டுக்குடும்ப நிலங்களில் உட்புரிவு செய்யப்படாத நிலங்களில், பட்டா உள்ளிட்டவை வாங்குவதில் சிக்கல் இருக்கும். அப்படியான நிலையில் போலியாக சான்றிதழ்களை உருவாக்கி விற்று மோசடி செய்து, அந்த நிலத்தை மேலும் வில்லங்கத்தில் தள்ளிவிடுகிறார்கள். இதேபோல் சிலர் போலியாக ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்து ஏமாற்றிவிடுகிறார்கள்.. குறிப்பாக மிகவும் வயதானர்களை குறிவைத்தே இப்படி மோசடி சம்பவங்கள் நடக்கினற்ன, அப்படி 3 மோசடி சம்பவங்கள் சென்னையை சுற்றி நடந்துள்ளதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூர் பார்த்தசாரதி ரெட்டியார் தெருவைச் சேர்ந்த 73 வயதாகும் லட்சுமிபதிக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம் விளாங்காடுபாக்கம் கிராமத்தில் 1 ஏக்கர் 51 சென்ட் நிலம் இருக்கிறது. இந்தநிலையில் சிலர் போலி ஆவணம் தயாரித்து லட்சுமிபதியின் நிலத்தை அபகரித்து, வீட்டு மனைகளாக பிரித்து பலருக்கு விற்பனை செய்து மோசடி செய்திருக்கிறார்கள் மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 75 லட்சம் ஆகும்.
இதுபற்றி லட்சுமிபதி அளித்த புகாரின்பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சென்னை வடகரை மேட்டுத் தெருவை சேர்ந்த விஜயகுமார் (49) என்பவரை நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், விளம்பூர் கிராமம், கீழ் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த 76 வயதாகும் இப்ராகிம் என்பவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில " சென்னை கொரட்டூரில் உள்ள எனக்கு சொந்தமான ரூ.90 லட்சம் மதிப்புள்ள நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து வேறு ஒருவருக்கு விற்று மோசடி செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டு தரவேண்டும்" என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடி தொடர்பாக நில தரகரான அம்பத்தூர், புதூரைச் சேர்ந்த விஜயகுமார் (47) என்பவரை கைது செய்தார்கள். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அப்துல் ரகுமான் என்பவரை போலீசாரை தேடி வருகிறார்கள்.
இதேபோல் வித்யா என்பவர் ஆசையாக பூந்தமல்லி அருகே நிலம் வாங்கி உள்ளார். வாங்கிய பின்னர் தான் மோசடி நிலம் என்று தெரிந்தது.. வேறு ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணம் தயாரித்து தனக்கு விற்று மோசடி செய்ததாக வித்யா போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த ராகுல் என்ற பிரியன் குமார் (33) கைது செய்யப்பட்டார். வயதானவர்களை குறிவைத்து நில மோசடி செய்து ஏமாற்றுபவர்கள் அதிகரித்து வருவதால், அடிக்கடி நிலத்தை பார்ப்பதுடன், மோசடி நடைபெறாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.












Click it and Unblock the Notifications