தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் உருது பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்த தமிழக அரசுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் உருது பாட ஆசிரியர் நியமனத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மதராஸா இ அசாம் என்ற அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக இருந்த உருது பாட ஆசிரியர் பணியிடத்திற்கு ஹாஜிரா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டார். ஆனால் இவர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதவில்லை என்று கூறி இந்த நியமனத்துக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஒப்புதல் வழங்க மறுத்து 2023 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதி தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. எனவே ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடக்கக் கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் சுரேந்தர் அமர்வில் இன்று (ஜூன் 28) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆசிரியர் தகுதி தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே இரண்டு முறை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதே வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications