கார்த்திகை தீப திருநாள்! மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு
சென்னை: மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. மலையில் நேரில் ஆய்வு செய்து இருந்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். மேலும் காவல்துறை இதற்கு முழு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கார்த்திகை திருநாளை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தர்ஹாவுக்கு அருகில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

கார்த்திகை தீபத் திருவிழா
மதுரை மாவட்டத்தை சேர்ந்த எழுமலை ராம ரவிக்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- திருப்பரங்குன்றம் மலையில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் இல்லாமல், பிள்ளையார்கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறது.
இது சட்டவிரோதம். தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். தர்ஹாவில் இருந்து, 15 மீட்டர் தொலைவில் உள்ள பழமையான தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்ட ரீதியாக தடை இல்லை. இதனை உறுதி செய்து உத்தரவாக நீதிமன்றம் வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
நீதிபதி உத்தரவு
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியிருந்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் பல்வேறு தரப்பினரையும் ஒரு மனுதாரராக இணைத்து இன்று வழக்கை தீர்ப்புக்காக ஒத்தி வைத்து இருந்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவிட்டுள்ளார். தர்ஹாவுக்கு அருகில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு தரப்பு கருத்துகள்
தர்ஹா தரப்பு, அரசு தரப்பு, அறநிலையத்துறை தரப்பு, மனுதாரர் வாஞ்சிநாதன் தரப்பு வாதங்களும் கோரப்பட்டது. இதில் எந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று முடிவு எடுப்பது கோவில் நிர்வாகம் தான். அதற்கான அதிகாரத்தை நீதிமன்றம் அவர்களுக்கு வழங்கியது என்றும், தனி நபரின் கோரிக்கையை அனைவருக்குமானதாக கேட்டு வழக்கு தொடர இயலாது. எனவே இந்த வழக்கு ஏற்கத்தக்கது அல்ல என அரசு தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது.
இவ்வாறு பல்வேறு தரப்பு கருத்துகளையும் கேட்டதற்கு பிறகே நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications