தனியார் நிதி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு.. இடைக்காலத் தடை விதித்தது ஹைகோர்ட்
சென்னை: தனியார் நிதி நிறுவனத்திற்கு எதிராக கோவை பொருளாதார குற்றப் பிரிவு பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டிய 11 கோடி ரூபாயை திருப்பி வழங்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.
கோவையில் செயல்பட்டு வந்த யூனிவெர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் நடத்திய தனியார் நிதி நிறுவனம், முதலீட்டாளர்களிடம் இருந்து 11 கோடியே 55 லட்சத்து 56 ஆயிரத்து 260 ரூபாய் முதலீடு பெற்றுள்ளது. நிறுவனத்தில் ஆய்வு நடத்திய கோவை பொருளாதார குற்றப் பிரிவு, தங்களுக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறி, அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்நிறுவனத்தின் அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, தங்களது நேர்மையை வெளிப்படுத்த நான்கு வாரங்களில் 2 கோடி ரூபாயை டிபாசிட் செய்வதாகவும், மீதத் தொகையை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனையின் அடிப்படையில் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்டு, தனியார் நிதிநிறுவனத்திற்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, முதலீட்டாளர்களுக்கு 6 மாதங்களில் பணத்தை திருப்பிக் கொடுப்பதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் குழுவை அமைத்தும் உத்தரவிட்டார். இந்த குழுவில் பொருளாதார குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர், தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆகியோரையும் நியமித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications