எல்லாம் பக்கா.. நாளை தொடங்கும் ‘ஸ்பெஷல் கேம்ப்’.. வரலாற்றிலேயே முதல் முறை.. மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை: மழைக்கால நோய்களுக்கான சிறப்பு முகாம்கள் நாளை தொடங்குகின்றன. நாளை தொடங்கி டிசம்பர் மாதம் வரை 10 ஞாயிற்றுக்கிழமைகள் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நவம்பர் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக டெங்கு பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில் பருவகால நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "வடகிழக்குப் பருவமழை 20ஆம் தேதியே தொடங்கி விட்டது. 29, 30 ஆகிய தேதிகளில் கூடுதல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எங்கெல்லாம் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டுமோ அங்கெல்லாம் அமைத்து பக்காவாக இருக்கிறது. எந்த பயமும் தேவையில்லை.
வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்போதும் அதனை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறையை பொறுத்தவரை, மழைக்கால நோய்களுக்கான சிறப்பு முகாம்கள் நாளை தொடங்குகின்றன. நாளை தொடங்கி டிசம்பர் மாதம் வரை 10 ஞாயிற்றுக்கிழமைகள் வாரந்தொறும் ஆயிரம் இடங்கள் என 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
மருத்துவத்துறை வரலாற்றிலேயே முதன் முறையாக, ஒரு பருவமழைக்கு பத்தாயிரம் மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் 1000 முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இந்தத் திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications