5 மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. “உடனே டெஸ்ட் பண்ணுங்க” - ராதாகிருஷ்ணன் சொன்னது என்ன?
சென்னை : தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
மிதமான வேகத்தில் கொரோனா! தினமும் இருமுறை விசாரிக்கும் முதல்வர்! ராதாகிருஷ்ணன் கூறிய தகவல்!
அதிகரித்து வருகிறது
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராதாகிருஷ்ணன், இந்தியாவில் இன்று 40 விழுக்காடு கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் குறைவாக இருந்த நிலையில், சற்று அதிகரித்து காணப்படுகிறது. நேற்று தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 195 என பதிவாகியுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாகவே உள்ளது எனக் கூறினார்.
5வது அலை
மேலும் பேசிய அவர், BA4, BA5 வகை உறுமாறிய கொரோனா தொற்று புதிதாக பதிவாகி வருவது, 5வது அலை தொடங்கியது என்பதனை காட்டுகிறது. தமிழகத்தில் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முகக்கவசம் அணியத் தேவை இல்லை என பலரும் நினைக்கிறார்கள்.
பாசிட்டிவ் வந்தாலும் கவலை இல்லை
அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள், பாசிட்டிவ் என்று வந்தாலும் கவலை இல்லை. மருத்துவமனையில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது பலரும் வீட்டுத் தனிமையில் தான் உள்ளனர். பரிசோதனை செய்யாமல் பிறருக்கு தொற்றை பரப்பி விட வேண்டாம் என அறிவுறுத்தினார்.
5 மாவட்டங்களில்
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு பெரும் பாங்காற்றி வருகிறது. இதனால், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்காக, 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் முகாம்கள் நடைபெற உள்ளது. அதனை அனைவரும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
கருமுட்டை
கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோடை மழை ஒரு சில இடங்களில் பெய்து வருகிறது. வீட்டு மாடி, டயர் போன்றவற்றில் தேங்கி உள்ள தண்ணீரில் ஏடிஸ் கொசு தங்கி டெங்கு ஏற்படுத்தும். தென்காசியில் 2 பேருக்கு டெங்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை அகற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசு மருத்துவமனைகளில்
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தனியார் கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு சிகிச்சையளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.