ஒற்றைத் தலைமை.. பொடி வச்சு பேசிய இபிஎஸ் தரப்பு.. பூனை வெளியே வந்துவிட்டதுனு கூறிய மனுதாரர்!
சென்னை: அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் கொடுக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தனது வாதத்தில் தெரிவித்துள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக் குழு கூட்டமும் செயற்குழு கூட்டமும் நாளை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த வரைவு தீர்மானத்தில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரங்கள் இல்லை. இதுகுறித்து பொதுக் குழுவில் புதிதாக எதுவும் சேர்க்கக் கூடாது. அது போல் கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளக் கூடாது என வாதிட்டார்.

பொதுக் குழு
வழக்கமான முறையில் பொதுக் குழு நடக்கலாம். தலைமையில் மாற்றம் கோரும் தீர்மானங்கள் கூடாது. 23 வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இமெயில் வந்தது. அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன். 23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் பொதுக் குழு கூட்டத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். உத்தரவாதம் அளிக்க முடியாது. அது போல் எந்த அஜெண்டாவையும் முன் கூட்டியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லாவற்றையும் பொதுக் குழுவில்தான் கூற முடியும். பெரும்பான்மை பொதுக் குழு உறுப்பினர்களின் விருப்பப்படியே முடிவுகள் எடுக்கப்படும்.

குரல் எழுப்பலாம்
எந்த உறுப்பினரும் பொதுக் குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்ட வேண்டும். கட்சி விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை. தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதும். அது போல் நாளை கட்சி விதிகளில் திருத்தம் நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம்.

ஜனநாயக நடைமுறை
கொள்ளைகளை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது. எந்த விதியையும் சேர்க்கவோ நீக்கவோ 2665 உறுப்பினர்கள் கொண்ட பொதுக் குழுவால் முடியும். பொதுக்குழுவில்தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும்; இது ஜனநாயக நடைமுறை என வாதம் செய்யப்பட்டது. எதையும் முன் கூட்டியே சொல்ல முடியாது என எடப்பாடி பழனிச்சாமி பொடி வைத்து பேசுவது ஓபிஎஸ் தரப்புக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுக் குழுவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், எதையும் உத்தரவாதம் அளிக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதத்திற்கு மனுதாரர் , "எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கூறுவதிலிருந்தே பூனை வெளியே வந்துவிட்டது" என வாதம் செய்தார்.












Click it and Unblock the Notifications